உலகின் அதிவேகமாக வளரும் நகரம் ஓசூர்.. ஏர்போர்ட் அவசர அவசியம்.. தமிழக அரசு தீவிரம்!
பெங்களூர்: பெங்களூருக்கு அருகே கர்நாடக அரசு இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில், தமிழக அரசு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் (Hosur Airport) அமைக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இப்பகுதி மக்களின் விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் அறிவித்தபடி, இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓசூரின் முக்கியத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சி காரணமாக விமான நிலையம் அமைவது அவசியம் என கருதப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் அதிக முதலீடுகள் குவிந்து வருவதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஓசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் விமான நிலையம்
தொழிலதிபர்களிடம் பேசிய அமைச்சர் ராஜா, இந்த திட்டத்திற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார். விமான நிலையத்திற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) இரண்டு சாத்தியமான இடங்களை ஆய்வு செய்து வருகிறது.
ஓசூர் சந்திக்கும் சவால்
இருப்பினும், ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு ஒரு முக்கிய சவால் உள்ளது. 2004-ஆம் ஆண்டு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் பெங்களூர் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL) நிறுவனத்திற்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம்தான் அந்த சவால். அந்த ஒப்பந்தத்தின்படி, தேவனஹள்ளியிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KIA) 150 கி.மீ சுற்றளவில் 2033ம் ஆண்டு மே மாதம் வரை புதிய விமான நிலையங்கள் அமைக்க கட்டுப்பாடு உள்ளது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மே 2019-ல் திறக்கப்பட்டதால், இந்த கட்டுப்பாடு திறக்கப்பட்ட தேதியிலிருந்து 25 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
பெங்களூர் பெறும் பலன்
அதேநேரம், ஓசூர் விமான நிலையம் அமைந்தால், தெற்கு பெங்களூர் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு செல்ல இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆகும் பயண நேரம் கணிசமாக குறையும். கெம்பேகவுடா விமான நிலையத்திலும் ஏர் டிராபிக் குறையும். இது அந்த விமான நிலையத்தை பயன்படுத்துவோருக்கும் நல்லதுதான்.
ஓசூர் முக்கியமான நகரம்
ஓசூரில் சுமார் 500 பெரிய தொழிற்சாலைகள் மற்றும் 3,000க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) உள்ளன. Ola, Ather, Simple Energy மற்றும் TVS மோட்டார் கம்பெனி போன்ற மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன. Apple நிறுவனத்திற்கு முக்கிய சப்ளையராக விளங்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் ஓசூரில் செயல்பட்டு வருகிறது. இதனால், ஓசூர் வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்தி, மேம்பட்ட உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் மையமாக திகழ்கிறது.
அதிவேக வளர்ச்சி
ஓசூரின் தொழில் விரிவாக்கம் காரணமாக மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் இதமான தட்பவெப்ப வானிலையுடன் அமைந்துள்ள ஓசூர், 2021-ஆம் ஆண்டில் உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 13-வது இடத்தை பிடித்தது. Visual Capitalist வெளியிட்ட அறிக்கையின்படி, ஓசூர் 5.38% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது.
ஓசூர் விமான நிலையம் எங்கு அமைய இருக்கிறது?
விமான நிலையத்திற்கான இடம் குறித்த இறுதி முடிவு, இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) சாத்தியக்கூறு அறிக்கையை தொடர்ந்து எடுக்கப்படும். பெலகொண்டப்பள்ளி அருகே உள்ள கிராமங்கள் மற்றும் டனேஜா ஏரோஸ்பேஸ் & ஏவியேஷன் லிமிடெட் (TAAL) நிறுவனம் தனியார் விமான நிலையம் வைத்திருக்கும் இடம் ஆகிய இரண்டு இடங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உள்கட்டமைப்பு திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில், அரசு விரைவில் இடத்தை தேர்வு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.











Click it and Unblock the Notifications