"பணிந்தது" பாஜக.. "பெரியாரை" ஏற்றது பள்ளி கல்வித்துறை.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்..?
பெரியார் குறித்த பாடம் கர்நாடக பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
பெங்களூரு: பாடப்புத்தகத்தில் இருந்து பெரியார், பகத்சிங், நாராயண குரு குறித்த பாடங்கள் நீக்கப்படவில்லை என்று கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் தெரிவித்துள்ள நிலையில், அப்பாடங்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன... அப்போது, நடப்பாண்டிற்காக 7 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த புத்தக்கத்தில் பெரியார், பகத்சிங், நாராயண குரு குறித்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பாடத்திட்டத்தில் இருந்து பெரியார் பாடம் நீக்கம்! மதவெறியை புகுத்தும் பாஜக! வைகோ கடும் கொந்தளிப்பு..!
ஹெட்கேவர்
மாறாக, 10ம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவனர், ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றிருந்தன.. இது அரசியல் தளத்தில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. மேலும், பகத்சிங் பற்றி தொகுப்பு நீக்கப்பட்டதற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.
சமூக அறிவியல்
"சமூக அறிவியல் பாட நூலில் விஷம கருத்துக்களை திணிப்பதை ஏற்க முடியாது.. பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்றை நீக்கிவிட்டு ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவர் குறித்த பாடம் சேர்க்கப்பட்டதையும் ஏற்க முடியாது.. இன்று பகத்சிங் பற்றிய பாடத்தை நீக்கியவர்கள், நாளை காந்தியின் பாடத்தையும் நீக்குவார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் கொந்தளித்தது. இப்படி நாலாபக்கமிருந்தும் எதிர்ப்பு கிளம்பவும், கர்நாடக பள்ளி கல்வித்துறை சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது..
நாகேஷ் விளக்கம்
இதுகுறித்து அமைச்சர் நாகேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது: "கர்நாடகாவின் பாடப்புத்தகத்திலிருந்து பெரியார், சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், சீர்திருத்தவாதி நாராயணகுரு, மைசூர் மன்னர் திப்பு சுல்தான் ஆகியோர் பற்றிய பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் முழுவதுமாக நீக்கப்படவில்லை.. யாரையும் மிகைப்படுத்தாமல் உண்மையான தகவல்களையும் வரலாற்றையும் மாணவர்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்
ராமன்
திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் ஒரு பக்கத்திலிருந்து 6 பக்கங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. நாராயண குரு குறித்த அத்தியாயம் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாற்றப்பட்டிருக்கிறது... ராமன் வேத கலாசாரத்தையும், ராவணன் திராவிட கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று பெரியார் பெரிதும் நம்பினார்... காரணம், பெரியார் ராமரின் தீவிர எதிர்ப்பாளர்.. அதுவும் இல்லாமல், கடவுள் ராமரின் போட்டோவுக்கு செருப்பு மாலையும் அணிவித்தவர்.. இதையெல்லாம் நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க விரும்பவில்லை...
பெரியார்
அதனால்தான் அவை நீக்கப்பட்டுள்ளன.. இறுதியாக 10-ம் வகுப்புக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது... அதில், பகத்சிங், நாராயண குரு, பெரியார் ஆகியோரின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.. ஹெட்கேவரை பொறுத்தவரை ஒரு சிறந்த தேசியவாதி.. நாட்டின் பெருமையை நிலைநாட்ட 1925-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பை உருவாக்கியவர்.. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகமாக திகழ்கிறார்.. ஆனால், கல்வித்துறையில் தற்போது மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களை எதிர்கட்சிகளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை என்பதால் பாடப்புத்தகங்கள் தொடர்பாக சர்ச்சைகளை கிளப்பி விட்டு வருகின்றனர்" என்றார்.