பலாத்காரம்: பிரஜ்வல் தந்தை கைதி எண் "4567" ரேவண்ணா மீது 2 பெண் அதிகாரிகள் நீதிபதி முன் வாக்குமூலம்!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் அமைச்சரும் 3,000 ஆபாச வீடியோக்கள் எடுத்த எம்பி பிரஜ்வலின் தந்தையான ரேவண்ணா மீது 2 அரசு அதிகாரிகள் பலாத்கார புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதி முன் ஆஜரான 2 பெண் அதிகாரிகளும் ரேவண்ணா மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது 3000 ஆபாச வீடியோக்கள். ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா, 300 பெண்களை நாசமாக்கி 3000 ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்திருந்தார். இந்த ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதியில் 25,000 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.

இந்த வழக்கில் பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரஜ்வல் வெளிநாடு தப்பிவிட ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு தற்போது சிறையில் அடைத்துள்ளது.
பிரஜ்வல் தந்தை ரேவண்ணா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. பரபரன அக்ரஹார சிறையில் கைதி எண் 4567 ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ரேவண்ணா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
இதனிடையே ரேவண்ணா மீது பலாத்கார புகார் கொடுத்த பெண்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ரேவண்ணா தங்களை பலாத்காரம் செய்ததாக 2 அரசு அதிகாரிகள் நேற்று நீதிபதிகள் முன் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பிரஜ்வலுக்கு எதிராக மொத்தம் 6 பெண்கள் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.
பிரஜ்வல் மற்றும் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க செல்போன் எண்கள் தரப்பட்டுள்ளன. சிறப்பு புலனாய்வுக் குழுவின் இந்த எண்ணில் ஏராளமான பெண்கள் தொடர்பு கொண்டு புகார் கொடுப்பது எப்படி என விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரேவண்ணாவுக்கு எளிதாக ஜாமீன் கிடைத்துவிடாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications