"உதயநிதி ஹிட்லர்”.. சனாதன ஒழிப்பு பேச்சை கண்டித்து புது பட்டம் கொடுத்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர்
பெங்களூர்: சனாதனத்தை கடுமையாக விமர்சித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஹிட்லர் என சாடியுள்ளார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில், கலந்துகொண்டு பேசிய அவர் சனாதனத்தை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த அவர், "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள். விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது.
அப்படி என்னதான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின்ற வகையிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தோம்.
இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச தோழர்களுக்கு வாழ்த்துகள். தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம்." என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் அந்த மாநாட்டில் உதயநிதி பேசும்போது, "சனாதானம் என்பது கொசு, டெங்கு, புளூ, மலேரியா போன்ற நோய். அதை அழிக்க வேண்டும்." என்றார்.
இதனை குறிப்பிட்டு உதயநிதி இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததாக செய்திகள் பரப்பப்பட்டன. அவர் மீது இது தொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டு உள்ளன. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பல்வேறு இந்துத்துவ அமைப்பினர், சாமியார்கள் என பெரும்பாலானோர் இதனை கண்டித்து பேசி வருகின்றனர்.
இதுகுறித்து ட்விட்டரில் உதயநிதி ஸ்டாலின் அளித்த விளக்கத்தில், "சட்டப்படி இதனை எதிர்கொள்வோம். காவிகளின் ட்விட்டர் பதிவுகளுக்கு அஞ்ச மாட்டோம். பெரியார், அண்ணா, கலைஞரின் வழிப்படி முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுகிறோம். இன்றும், நாளையும், என்றும் சனாதானத்தை எதிர்த்து போராடுவேன். இந்த எதிர்ப்பில் இருந்து சிறிதும் பின் வாங்க மாட்டேன்." என்றார்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை, "இதுதான் இந்நாட்டின் சமூகக் கட்டமைப்பைப் பணயம் வைத்து ஆட்சிக்கு வருவதற்காக ஒன்றிணைந்து உள்ள கட்சிகளுடைய கூட்டணியின் மனநிலை. இது ஜனநாயக விரோதமானது. மனித நேயத்திற்கே எதிரானது என்பது மிகத் தெளிவாக உள்ளது. உதயநிதிக்கு ஹிட்லர் என்ற வார்த்தை சரியாக பொருந்தும்." என்றார்.












Click it and Unblock the Notifications