மிரட்டி பணம் பறிக்கும் ஜிஎஸ்டி அதிகாரிகள்.. வணிகர்களை காப்பாத்துங்க! கர்நாடகா தொழிலதிபர்கள் கோரிக்கை
பெங்களூர்: ஜிஎஸ்டி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி அதிகாரிகள் குறித்தும் ஏராளமான குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன. குறிப்பாக கர்நாடகா வணிகர்களை அதிகரிகளின் மிரட்டல்களிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று, தொழிலதிபர்கள் பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்போவதாக மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 1.5 கோடியை ஜிஎஸ்டி அதிகாரிகள் பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்தே மேற்குறிப்பிட்ட கோரிக்கை முன்வந்திருக்கிறது.

அதாவது பெங்களூரில் கேஷவ் தக் எனும் தொழிலதிபர், மேக்ஸ் சொல்யூஷன்ஸ் எனும் தனியார் நிறுவனத்தை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இப்படி இருக்கையில், ஜிஎஸ்டி அதிகாரிகள் என்கிற பெயரில் சிலர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி இவரது அலுவலகத்துக்கு வந்திருக்கின்றனர்.
அங்கு சில ஃபைல்களை ஆய்வு செய்த அவர்கள், மேக்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வரி செலுத்தியதில் ரூ.45 கோடி மோசடி செய்ததாக கூறியுள்ளனர். மேலும், இந்த மோசடி தொடர்பாக கேஷவ் தக் கைது செய்யப்படலாம் என்றும் மிரட்டியுள்ளனர். மிரட்டிய இவர்கள், இதிலிருந்து தப்பிக்க ஐடியா கொடுப்பதாக கூறி, ரூ.3 கோடி கேட்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து முதலில் அதிர்ச்சியடைந்த கேஷவ் தக், அலுவலகத்திற்கு வந்தவர்கள் உண்மையான அதிகாரிகளா? என்பது குறித்து விசாரித்திருக்கிறார். விசாரித்ததில், தன்னை மிரட்டியது பெங்களூரு மத்திய மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவின் ஆணையர் அபிஷேக், மூத்த புலனாய்வு அதிகாரிகள் மனோஜ் சைனி, நாகேஷ் பாபு மற்றும் சோனாலி சஹே ஆகியோர் என்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து செப்.1ம் தேதி இந்த அதிகாரிகளை சந்தித்துள்ளார் கேஷவ். அப்போது ரூ.3 கோடி உடனடியாக கொடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் உடனடியாக கைது செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். வேறு வழியில்லாமல் எங்கெங்கே பணத்தை திரட்டி, ரூ.1.5 கோடியை கேஷவ் கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த பணம் போதாது என்றும், மேலும் கூடுதலாக பணம் வேண்டும் என்றும் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் கேஷவ் தக் புகார் கொடுத்திருக்கிறார். புகாரில் மேற்குறிப்பிட்ட விஷயம் அனைத்தையும் விவரமாக குறிப்பிட்டிருக்கிறார். புகாரையடுத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் அபிஷேக், மனோஜ் சைனி, நாகேஷ் பாபு மற்றும் சோனாலி சஹே ஆகிய நால்வரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில், லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி கைது அங்கித் திவாரி கைது செய்திருந்தது, மத்திய நிறுவனங்கள் மீது பெரும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது. தற்போது இதனை தொடர்ந்து, பெங்களூரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பது இந்த விமர்சனங்களை கூர்மையடைய செய்திருக்கிறது.
இந்நிலையில், ஊழல் அதிகாரிகளால் ஜிஎஸ்டி சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதில் இருந்து நேர்மையான தொழிலதிபர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆரின் கேபிடல் பார்ட்னர்ஸ் தலைவர் டிவி மோகன்தாஸ் பாய், இந்த பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“வணிகர்களும், தொழிலதிபர்களும் அச்சத்தில் வாழ்கின்றனர். ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு அரசாங்கம் கடுமையான அதிகாரங்களை வழங்கியுள்ளதால், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர்கள் பணம் பறித்து வருகின்றனர். இந்த அச்சுறுத்தல்கள் குறித்து பல புகார்கள் குவிந்துள்ளன.
புதிய இந்தியாவில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிதியமைச்சரும், பிரதமரும் நேரடியாக தலையிட வேண்டும். நமது அமைச்சர்களும், எம்.பி.க்களும் கூட இந்த பிரச்னையிலிருந்து எங்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர். பழிவாங்கும் பயம் காரணமாக பலரும் இது குறித்து புகார் அளிக்க முன்வர தயங்குகின்றனர்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications