கர்நாடகாவில் அடுத்து காங்கிரஸ்தான்.. எத்தனை இடங்களில் வெல்லும்.. அடித்து சொல்லும் டிகே.சிவக்குமார்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது வரை வரும் கருத்துக்கணிப்புகள் காங்கிரசுக்குச் சாதகமாகவே வரும் நிலையில், அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் டிகே சிவக்குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இருக்கும் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே 10ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அங்கே இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது.

கர்நாடகா தேர்தல்: தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். அங்கே பாஜகவுக்கு வலுவான கட்டமைப்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் கடலோர கர்நாடகாவில் பாஜகவுக்கு நல்ல ஆதரவு இருக்கவே செய்கிறது. இதனால் எப்படியாவது கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இருப்பினும், இதுவரை வந்த கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லை. அங்கே காங்கிரஸ் கட்சிக்கே வெல்ல வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அங்கே முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் இயங்கி வருகிறது. பல்வேறு விஷயங்களிலும் களத்தில் இறங்கி அவர்கள் வேலை செய்து வருவதால், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்தே வருகிறது. இந்தச் சூழலில் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு டிகே சிவக்குமார் அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
எத்தனை இடங்கள்: அடுத்து வரும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறும் என்று டிகே சிவக்குமார் தெரிவித்தார். அத்துடன் நில்லாமல் மே 10-ம் தேதி நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 141 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அதை விடக் கூடுதலாக 141 இடங்களில் வெல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்.. இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை அமைய எல்லாம் வாய்ப்பே இல்லை. இதனால் ஜே.டி.(எஸ்) உடன் நாங்கள் கூட்டணி அமைக்க உள்ளதாக வரும் தகவல்கள் முற்றிலும் பொய். இப்போது வரை 166 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அனைவரும் நிச்சயம் மிக பெரியளவில் வெல்வார்கள். அதில் சந்தேகமே வேண்டாம்.
முதல்வர் யார்: எனக்கும் சித்தராமையாவுக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் எனது ஆதரவு வேட்பாளர்கள் அவரது ஆதரவு வேட்பாளர்கள் என வேட்பாளர்களே பிளவுபட்டு இருப்பதாகவும் வெளியாகும் தகவல்கள் முழுக்க முழுக்க பொய். நாங்கள் யாரும் இவரைத் தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அழுத்தம் தரவில்லை. அவர்கள் அனைவருமே காங்கிரஸ் வேட்பாளர்கள் அவ்வளவு தான்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கட்சியின் முதல்வர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவீர்களா என்ற கேள்விக்கு, கட்சி மேலிடமே இறுதி முடிவை எடுக்கும் என்றார். எவ்வாறாயினும், தமக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் வரவேற்பதாகவும், அனைவரும் முதலமைச்சராக ஆசைப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications