பெரிய சிக்கலில் எடியூரப்பா.. போக்சோ வழக்கில் பிடிவாரண்ட்! வழக்கின் பின்னணி என்ன! இதுவரை நடந்தது என்ன
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவுக்கு போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா மீதான புகார் என்ன.. இந்த வழக்கின் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது. சமீபத்தில் தான் பிரஜ்வல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பிடி வாரண்ட்: இதற்கிடையே இப்போது கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை பெங்களூர் நீதிமன்றம் பிறப்பித்தது. எந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த பிப். மாதம் எடியூரப்பா தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமியின் தாய் புகார் அளித்தார்.
என்ன நடந்தது: கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாக அந்த சிறுமியின் தாய் தனது புகார் மனுவில் கூறியுள்ளார். அதாவது முறைகேடு வழக்கு ஒன்றில் உதவி கோரி தனது மகளை எடியூரப்பாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பாவை பார்க்கச் சென்ற போது முதலில் தன்னிடம் கொஞ்ச நேரம் பேசிய எடியூரப்பா பிறகுத் தனது மகளை ஒரு ரூமிற்குள் அழைத்துச் சென்றுவிட்டதாக அந்த பெண் கூறியிருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து தனது மகள் திரும்ப வந்ததாகவும் என்ன நடந்தது எனக் கேட்ட போது எடியூரப்பா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறியதாகவும் புகார் அளித்த அந்த சிறுமியின் தாய் கூறுகிறார்.
புகார்: இது குறித்து அப்போதே எடியூரப்பாவிடம் கேட்டதாகவும் அதற்கு அவர், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை தானா என செக் செய்ததாகக் கூறியதாகவும் அந்த சிறுமியைத் தாய் கூறுகிறார். முதலில் எடியூரப்பாவுக்கு எதிராகப் புகார் அளித்த பயந்ததாகவும் இருப்பினும் தனது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே புகார் அளிக்க முன்வந்ததாகவும் பெண் தெரிவித்தார்.
புகார் அளித்த இந்த சிறுமியின் தாயாருக்கு 54 வயதாகிறது. அவர் கடந்த மே மாதம் தான் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
விசாரணை: இந்த வழக்கு முதலில் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே கடந்த மார்ச் 14ம் தேதி கர்நாடக டிஜிபி அலோக் மோகன் உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கு கர்நாடக சிஐடிக்கு மாற்றினார். அவர்கள் எடியூரப்பாவின் குரல் மாதிரியைக் கடந்த ஏப்ரல் மாதம் சேகரித்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமலேயே இருந்துள்ளார். இந்தச் சூழலில் தான் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விசாரணைக்கு ஆஜராக எடியூரப்பாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் ஆஜராகவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில உள் துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
மறுப்பு: அதேநேரம் தனது மீதான குற்றச்சாட்டுகளை எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனக்கு எதிராக இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரித்துள்ளார். மேலும், தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்ய அவர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இப்போது முன்ஜாமீன் கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications