தண்ணீர் இல்லாமல் திணறும் ஐடி தலைநகர்.. பெங்களூர் தண்ணீர் பஞ்சத்திற்கு உண்மையில் என்ன தான் காரணம்!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இந்தளவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பஞ்சத்திற்கு என்ன காரணம் இதைச் சமாளிக்க அம்மாநில அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிக்கக் கூட பல இடங்களில் தண்ணீர் இல்லாத சூழல் இருக்கிறதாம். பெங்களூரில் இந்தளவுக்கு மோசமாகத் தண்ணீர் பஞ்சம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.

தண்ணீர் பஞ்சம்: இந்தாண்டு பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதியளவில் மழை பெய்யாததே இதற்கு முக்கிய காரணமாகும். பெங்களூரில் போதிய மழை இல்லாமல் போனதால் காவிரி ஆற்றின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து. இது அங்கே குடிநீர் விநியோகம் மற்றும் விவசாயப் பாசனம் என இரண்டையும் மோசமாகப் பாதித்துள்ளது. இதனால் மக்கள் அதிகப்படியாக ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நீரைப் பயன்படுத்தவே அது ஆழ்துளைக் கிணறுகளிலும் நீரைக் குறைத்து நிலைமையை மோசமாக்குகிறது,
இன்னும் கோடைக் காலம் தொடங்காத நிலையில், இப்போதே இந்தளவுக்கு நிலைமை மோசமானதாக மாறி இருக்கிறது. இது நிலைமையைச் சமாளிக்க உடனடி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. பெங்களூரு பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள 14,781 ஆழ்துளைக் கிணறுகளில் 6,997இல் இப்போது நீர் வருவதில்லையாம். இதை அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் உறுதி செய்துள்ளார்.
நீர் நிலை: இது குறித்து கர்நாடக இயற்கை பேரிடர் மேலாண்மை மைய வல்லுநர்கள் கூறுகையில், "பிப்ரவரி 28 ஆம் தேதி நிலவரப்படி ஹாரங்கி, ஹேமாவதி, கேஆர்எஸ் மற்றும் கபினி உள்ளிட்ட முக்கிய காவிரிப் படுகை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அவற்றின் மொத்த கொள்ளளவில் வெறும் 39 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. இந்த நீர்த்தேக்கங்கள் தற்போது சுமார் 44.65 டிஎம்சி நீரை வைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த இங்கே 64.61 டிஎம்சி நீர் இருந்த நிலையில், இந்தாண்டு 44 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
பெங்களூரின் நகர்ப்புற பகுதிகளைக் காட்டிலும் புறநகர்ப் பகுதிகளில் தான் தண்ணீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது, மத்திய பகுதிகள் நிலைமையை ஓரளவுக்குச் சமாளிக்கக்கூடியதாகவே இருப்பதாகப் பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தண்ணீர் பிரச்சினையைச் சரி செய்யக் கர்நாடக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கர்நாடக அரசு: இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண, கர்நாடகா பால் கூட்டமைப்புடன் இணைந்து கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கிறது. அவர்களின் பால் டேங்கர்களைப் பயன்படுத்தி பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தைக் கர்நாடக அரசு செயல்படுத்துகிறது. நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், நகரைச் சுற்றி இருக்கும் போர்வெல்களை கர்நாடக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
பெங்களூர் மாநகராட்சி அதிகார எல்லைக்குள் உள்ள 110 கிராமங்களுக்குக் காவிரி நீர் விநியோகத்தை விரிவுபடுத்தும் திட்டம் மே மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்றும் சிவகுமார் தெரிவித்தார். அங்கே இரண்டு கிமீ தூரத்திற்குச் சின்ன பிரச்சினை இருந்ததாகவும் அதைத் தானே களத்திற்குச் சென்று சரி பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தனியார் வாட்டர் டேங்கர் லாரிகள்: பெங்களூரில் தனியார் வாட்டர் டேங்கர் லாரிகள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து சிவக்குமார் கூறுகையில், "தனியார் தண்ணீர் டேங்கர் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத டேங்கர்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், வாட்டர் டேங்கரின் விலையை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications