கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார்? திணறும் மேலிடம்.. ரேசில் முந்துகிறாரா சித்தராமையா.. பரபர பின்னணி
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை திணறுவதாக தெரிகிறது.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 13 ஆம் தேதி எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களுடன் ஆட்சியை இழந்தது.

காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு முதல்வரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடத்திற்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. நேற்று பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைமைக்கு அளிக்கப்படுவதாக எம்.எல்.ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு எம்.எல்.ஏவிடமும் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்டனர். அந்த கருத்துகளை அவர்கள் எழுத்து மூலமாக பதிவு செய்யப்பட்டது. வெளிப்படையாக தெரிவிக்க விரும்பாத எம்.எல்.ஏக்களுக்காக பெட்டியும் வைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் விருப்பத்தை அதில் குறிப்பிட்டு போட்டனர். நேற்று நள்ளிரவு வரை கருத்து கேட்கப்பட்டது.
எம்.எல்.ஏக்கள் அளித்த கருத்துக்களை அறிக்கையாக காங்கிரஸ் தலைமைக்கு கட்சி மேலிட பார்வையாளர்கள் அளித்துள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அடுத்த முதல்வரை அறிவிக்க உள்ளது. இதில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் சித்தராமையாவிற்கு ஆதரவி தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேவேளையில், டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஒக்கலிக்கர் சங்கம் மற்றும் சமூக மடாதிபதிகள் கோரி வருகின்றனர். அதேபோல சித்தராமையா ஆதரவாளர்களுக்கும் சித்தராமையாவிற்கு முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
முதல்வர் பதவி தங்களுக்கு தான் வேண்டும் என இரு தரப்பும் பிடிவாதம் காட்டுவதால் முடிவை அறிவிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறுவதாக சொல்லப்படுகிறது. அதே வேளையில், இன்று மதியம் முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று மேலிட அழைப்பை ஏற்று டெல்லி சென்றுள்ளார். அவருடன் சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.

டிகே சிவக்குமாருக்கும் டெல்லி வர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தனது பயணத்தை டிகே சிவக்குமார் ரத்து செய்தார். சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுவதால் அதிருப்தி அடைந்த டிகே சிவக்குமார் டெல்லி பயணத்தை ரத்து செய்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.
எனினும் இதை மறுத்துள்ள டிகே சிவக்குமார் தனக்கு வயிற்று வலி என்றும் அதன் காரணமாகவே டெல்லி செல்லவில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில் முதல்வர் விவகாரத்தில் கட்சியின் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் டிகே சிவக்குமார் கூறியிருக்கிறார். கர்நாடகாவில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவதில் காங்கிரஸ் தலைமை காட்டும் நிதானம் கர்நாடக அரசியலில் பரபரப்பை எகிற வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications