சொந்தமாகவே சூனியம் வைப்பதா? டிகே சிவக்குமாரை முதல்வராக்க காங்கிரஸ் தயங்குவது ஏன்? 5 காரணங்கள் இதோ
பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவுக்கு பதில் டிகே சிவக்குமாரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் மறுத்துள்ளது. இதனால் அதிருப்தியில் உள்ள டிகே சிவக்குமார் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரை காங்கிரஸ் கட்சி முதல்வராக்க மறுப்பதன் பின்னணியில் 5 முக்கிய பாயிண்டுகள் உள்ளன.
கர்நாடகாவில் 2013 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. முதல்வராக சித்தராமையா இருந்தார். அதன்பிறகு 2018 ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைந்த நிலையில் அதுவும் ஓராண்டில் கவிழ்ந்தது. இதையடுத்து அடுத்த 4 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடந்தது.

இந்நிலையில் தான் கடந்த 10ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மே மாதம் 13ம் தேதி ரிசல்ட் வெளியான நிலையில் 224 தொகுதிகளில் 135 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியமைக்க 113 இடங்கள் போதும் என்ற நிலையில் கூடுதலாக காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது.
இந்த தேர்தலில் பாஜக வெறும் 66 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வென்றனர். இந்நிலையில் தான் காங்கிரஸில் அடுத்த முதல்வர் யார் என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டு வருகிறார். முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையாவின் பெயர் தான் கர்நாடகா முதல்வர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகின. மாறாக டிகே சிவக்குமார் துணை முதல்வராக உள்ளதாக கூறப்பட்டது.
இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில் கர்நாடகா காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கர்நாடகா முதல்வர் பதவியில் யாரை அமர்த்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். அதோடு 48 முதல் 72 மணிநேரத்தில் கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் கூட கர்நாடகா முதல்வருக்கான ரேஸில் டிகே சிவக்குமாரை விட சித்தராமையாவின் பெயர் தான் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராகுல் காந்தியின் ஆதரவு சித்தராமையாவுக்கு உள்ளதாக தெரிகிறது.
டிகே சிவக்குமார், சித்தராமையா இருவரும் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் தான். இருவரும் கர்நாடகாவில் மிகப்பெரிய தலைவர்கள் தான். ஆனாலும் சித்தராமையாவை ஒப்பிடும்போது டிகே சிவக்குமாரை ஏன் காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்க தயங்குகிறது என்பது பற்றி பலருக்கும் தற்போது கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மொத்தம் 5 முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
முதல் பாயிண்ட்: கர்நாடகாவில் சித்தராமையா மூத்த தலைவராக உள்ளார். கடந்த 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தார். இந்த சமயத்தில் பெரிய அளவில் எந்த சிக்கலும் அரசுக்கு எழவில்லை. மேலும் டிகே சிவக்குமாரை ஒப்பிடும் போது அரசியல் அனுபவமும், சாமர்த்தியத்தனமும் சித்தராமையாவுக்கு உண்டு. மேலும் நிதி அமைச்சராக 12 முறை சித்தராமய்யா பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். தற்போது பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், டிகிரி முடித்து வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.1,500 என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதற்கு நிதி நிலைமை பற்றி புரிதல் இருப்பவரை முதல்வராக்கினால் சரியானதாக இருக்கும். மேலும் இந்த திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு பயனளிக்கும் என காங்கிரஸ் மேலிடம் நம்புகிறது.
2வது பாயிண்ட்: காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் டிகே சிவக்குமாரை விட சித்தராமையாவுக்கு அதிகமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 60 முதல் 80 பேர் சித்தராமையாவுக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் சித்தராமையாவை விட்டுவிட்டு டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கினால் அது எதிர்க்காலத்தில் பிரச்சனையை உருவாக்க வாய்ப்புள்ளது என காங்கிரஸ் மேலிடம் நம்புகிறது. மேலும் சித்தராமையா ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினால் அது ஒட்டுமொத்த அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என மேலிடம் நினைக்கிறது.
3வது பாயிண்ட்: சித்தராமையா என்பவர் கர்நாடகா மாநிலம் முழுவதும் புகழ்பெற்ற தலைவராக உள்ளார். ஆனால் டிகே சிவக்குமார் அப்படியில்லை. டிகே சிவக்குமாரை கர்நாடகா மக்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்தாலும் அவர் மிகவும் செல்வாக்கு பெற்ற தலைவராக இன்னும் பெயர் எடுக்கவில்லை. குறிப்பாக வடகர்நாடகா மக்களிடம் டிகே சிவக்குமாருக்கு செல்வாக்கு என்பது குறைவாக உள்ளது. மேலும் டிகே சிவக்குமார் ஒக்கலிகர் சமுதாய தலைவராக மட்டுமே அறியப்படுகிறார். ஆனால் சித்தராமையாவுக்கு மாநிலம் முழுவதும் செல்வாக்கு இருப்பதோடு இஸ்லாமியர்கள், தலித், மிகவும் பிற்படுத்தப்பட்டோம் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவராக சித்தராமையா அடையாளம் காணப்படுகிறார். இது டிகே சிவக்குமாருக்கு மைனனஸாக உள்ளது.

4வது பாயிண்ட்: மேலும் டிகே சிவக்குமார் கர்நாடகாவில் மிகப்பெரிய தலைவராக வளர்ந்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் சிபிஐயில் சொத்து குவிப்பு வழக்கு, அமலாக்கத்துறையில் ஹவாலா பணப்பரிமாற்றம் குற்றச்சாட்டு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டால் ஒருவேளை அவரை மத்திய விசாரணை அமைப்பு கைது செய்து விடுமோ? என காங்கிரஸ் மேலிடம் பயப்படுகிறது. மேலும் இது பாஜக தூண்டுதலில் நடக்கலாம் எனவும் காங்கிரஸ் நினைக்கிறது. மேலும் டிகே சிவக்குமார் பல இக்கட்டான காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பல எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் வைத்து பாதுகாத்துள்ளார். இத்தகைய சூழலில் முதல்வர் பதவி கொடுத்து சொந்த காசிலேயே சூனியம் வைப்பது போல் ஒரு திறமையான தலைவரை தேவையின்றி பிரச்சனையில் சிக்க வைத்து விடுவோமோ என காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.
5வது பாயிண்ட்: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மாநில தலைவராக டிகே சிவக்குமார் அதிகம் உழைக்க வேண்டும். இத்தகைய சூழலில் முதல்வர் பதவியால் அரசுக்கு அல்லது விசாரணை அமைப்புகள் மூலம் டிகே சிவக்குமாருக்கு சிக்கல் ஏற்பட்டால் அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். இந்த காரணங்களால் தான் டிகே சிவக்குமாரை விட சித்தராமையா முதல்வர் ரேஸில் முன்னிலையில் உள்ளார். அதோடு சித்தராமையாவுக்கு முதல் 2 ஆண்டு முதல்வர் பதவி வழங்கினால் அவரது ஆதரவாளர்கள் அமைதியாகி விடுவார்கள். அதன்பிறகு சித்தராமையாவை சமாதானம் செய்து டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கலாம் என காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கூட முதல்வர் பதவியை சித்தராமையாவுக்கு விட்டு கொடுக்க டிகே சிவக்குமார் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications