பாஜகவில் இருந்து விலகி..காங்கிரஸ் கட்சிக்கு வந்ததற்கு இதுதான் காரணம்.. போட்டு உடைத்த ஜெகதீஷ் ஷெட்டர்
பெங்களூர்: கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன்? என்று தற்போது ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கம் அளித்துள்ளார்.
224-சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

கர்நாடகாவை பொறுத்தவரை அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் ஒரே தென்மாநிலம் கர்நாடகம்தான். எனவே இங்கு ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.
வேட்பாளர் தேர்தலில் மிகுந்த கவனம் செலுத்தி பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பல சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவர்களான ஈஸ்வரப்பாவுக்கு கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கும் போட்டியிட சீட் கொடுக்கப்படாது என்று பாஜக மேலிடம் திட்டவட்டமாக கூறியது.
இதனால், கடும் அதிருப்தி அடைந்த ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்த நாளே காங்கிரஸ் கட்சியில் ஜெகதீஷ் ஷெட்டர் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த கையோடு, அவருக்கு காங்கிரஸ் சார்பில் உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. ஜெகதீஷ் ஷெட்டர் இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 சட்டசபை தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

இதன் காரணமாக பாஜகவிற்கு கடும் சவாலை ஜெகதீஷ் ஷெட்டர் அளிப்பார் எனத்தெரிகிறது. எனினும், ஜெகதீஷ் ஷெட்டரை வீழ்த்த வேண்டும் என்று ஒருபக்கம் பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. இதனால், உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) கூடுதல் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன்? என்று ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:- பொதுமக்கள் என்னை நம்பினார்கள். ஹுப்பளி தொகுதி மக்களும் என்னை நம்பினார்கள். எனது சுயமரியாதை பாதிக்கப்பட்டது. இது சவாலானதாக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மாறியதும் எனது தொகுதியில் பல இடங்களுக்கு நேற்று நான் சென்றேன். அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. கர்நாடகாவில் ஆட்சியை பாஜக நிறைவு செய்துள்ளது.
மூத்த தலைவர்களை மோசமாக நடத்துவதை பற்றியே மக்கள் அதிகம் பேசுகிறார்கள். வளர்ச்சி குறித்த பிற விஷயங்கள் பற்றி பேசவில்லை. முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உள்ளதா? மூத்த தலைவர்களை அலட்சியம் செய்ததால், இந்த விவாதம் தற்போது எழுந்துள்ளது. சுய நலம் மிக்க சிலர் கர்நாடகாவில் ஒட்டு மொத்த பாஜகவையும் அரசையும் தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications