"அக்னி பரீட்சை.." கர்நாடகாவில் மல்லுக்கட்டும் பாஜக vs காங்கிரஸ்.. மெஜாரிட்டி யாருக்கு! பரபர
கர்நாடகாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அங்குத் தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், இது காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு தரப்பிற்கும் அக்னிப் பரீட்சையாக மாறியுள்ளது.
கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருப்பதால் அதைத் தக்க வைக்க பாஜக முயல்கிறது.
அதேநேரம் பசவராஜ் பொம்மை அரசுக்கு எதிராகவே மக்கள் மனநிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த நேரத்தைப் பயன்படுத்தி கம்பேக் கொடுக்க காங்கிரஸ் ஒரு பக்கம் முயன்று வருகிறது.

கர்நாடகா
இருப்பினும், இந்தத் தேர்தல் நிச்சயம் இரு கட்சிக்கும் அவ்வளவு எளிமையாக இருக்காது. தேர்தல் நெருங்க நெருங்கப் பல கட்சி தாவல்களை நாம் பார்க்க முடியும். அங்குக் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிகழ்வுகள்,, அடுத்து என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் நடக்கும் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. பாஜக தலைமை பிரசாரக் குழு தலைவராக முதல்வர் பொம்மையை பாஜக அறிவித்துள்ளது. அக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் முதல்வர் வேட்பாளரை இன்னுமே அவர்கள் அறிவிக்கவில்லை.

பாஜக
தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் 100% இல்லை என்பதையே இது காட்டுகிறது. இருப்பினும், பிரச்சாரக் குழு தலைவர் பதவி என்பது பசவராஜ் பொம்மை மற்றும் அவரது ஆதரவாளர்களின் சமாளிக்கத் தரப்பட்ட பொறுப்பாக இருக்கும். இந்த குழுவில் கர்நாடக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார். பாஜகவின் முன்னாள் முதல்வர்கள் அனைவரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், எடியூரப்பாவுக்கு இருக்கும் அந்தஸ்துக்கும் செல்வாக்கிற்கும் அவருக்கு இன்னும் முக்கியமான பதவி தந்திருக்க வேண்டும் என்ற கோஷங்களும் எழுந்துள்ளன.

குழப்பம்
தேர்தல் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநில தலைவர்களைக் காட்டிலும் மத்திய தலைமை மீதே பாஜக அதிக நம்பிக்கை வைத்துள்ளது. இருப்பினும், சீட் வழங்குவதில் தான் பாஜகவுக்கு உண்மையான டெஸ்ட் இருக்கும். கட்சியில் நீண்ட காலம் இருப்பவர்கள் ஒரு பக்கம் சீட் கேட்பார்கள்.. பாஜக அரசு அமையக் காரணமாக இருந்த, கட்சி மாறியவர்களும் சீட் எதிர்பார்ப்பார்கள். இதுபோக, புதிய திறமையான தலைவர்களும் இடங்களைக் கோருவார்கள். இது பாஜகவுக்குத் தலைவலியையே தரும்.

க்ளீன் இமேஜை
க்ளீன் இமேஜை கொண்டே பாஜக போட்டியிட விரும்பும். ஊழல் புகார்களில் முக்கிய கட்சி தலைவர்கள் சிக்கி வரும் நிலையில், இப்போது பாஜகவுக்கு இந்த க்ளீன் இமேஜ் ரொம்பவே முக்கியம். அதேநேரம் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களையும் பெற வேண்டும் என்பதால் உள்ளூரில் செல்வாக்கு உடையவர்களுக்கு பாஜக இடம் தந்தாக வேண்டியிருக்கிறது. மறுபுறம் காங்கிரஸ் கம்பேக் தரக் காத்திருக்கிறது. காங்கிரஸிலும் உட்கட்சி பிரச்சினை இருந்தாலும் கூட, மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பாக இந்த தேர்தலைக் காங்கிரஸ் பார்க்கிறது.

காங்கிரஸ்
டி கே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இணைந்து வீடியோ வெளியிட வேண்டியிருக்கும் அளவுக்குக் கட்சியில் பூசல்கள் உள்ளது. இருவருக்கும் ஆசைகள் இருந்தாலும் தேர்தல் களத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர். வெளிப்படையாக தங்கள் எதிர்கால ஆசைகள் தெரிவித்தால்.. அது மோதலை ஏற்படுத்தும் என்பதால் இருவருமே தெளிவாக உள்ளனர். முதலில் கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறுவது முக்கியம் என்பதால் அதைக் குறிவைத்து வேலை செய்து வருகின்றனர்

இரட்டை தலைமை
பெரும்பான்மை கிடைத்தவுடன் தலைமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.. கர்நாடகாவில் இருக்கும் இரண்டு முக்கிய சாதிகளைச் சேர்ந்த இந்த இரு தலைவர்களும் காங்கிரஸ் பிரசாரத்தின் முகமாக இருக்க வேண்டும். அப்போது தான் தேவையான இடங்களை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் பெற முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது. பாஜகவைப் போலவே காங்கிரஸிலும் சீட் ஒதுக்கப்படுவதில் சிக்கல் இருக்கும். ஏனென்றால் இரு தலைவர்களுமே தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

சீட் ஒதுக்கீடு
பல்வேறு விஷயங்களை மனதில் வைத்தே சீட் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த காலங்களில் பல மாநிலங்களில் அதிருப்தியாளர்கள் வெளியேறியதே காங்கிரசுக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது. கர்நாடக தேர்தலில் இதை எப்படி அவர்கள் சமாளிக்கப் போகிறார்கள் என்பது முக்கியம். தேர்தலே இன்னும் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் ஜேடிஎஸ் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தில் இறங்கிவிட்டது. இருப்பினும், முக்கியமான சீட்களுக்கு இன்னுமே ஜேடிஎஸ் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. தேர்தல் நெருங்கும் சமயத்திலேயே அங்கு வேட்பாளர்களை அறிவிக்கும்.

ஜேடிஎஸ்
அதேபோல காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இருந்து வெளியேறும் அதிருப்தியாளர்களையும் தங்கள் பக்கம் இழுக்க ஜேடிஎஸ் முடிவு செய்துள்ளது. மேலும், தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஜேடிஎஸ், கிங் மேக்கராகவோ அல்லது கிங்காகவோ உருவாக முடியும் என்று நம்புகிறது. அங்குக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி மோதல் நிலவும் நிலையில், மூன்றாவது இடத்திற்கு ஜேடியு கட்சியும் மல்லுக்கட்டுகிறது. தேர்தலில் வென்று யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது கொஞ்சக் காலத்தில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications