கர்நாடகாவில் காய்கறி வியாபாரிக்கு ரூ.29 லட்சத்திற்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்! ஆனா காய்கறிக்கு தான் ஜிஎஸ்டியே இல்லையே
பெங்களூர்: கர்நாடகாவின் ஹாவேரியைச் சேர்ந்த ஒரு சிறிய காய்கறி வியாபாரிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளது. அதில் இருக்கும் தொகையைப் பார்த்தவுடன் அவர் ஆடிப் போய்விட்டார். சிறிய காய்கறிக் கடை நடத்தி வரும் இவருக்கு ரூ.29 லட்சம் கோரி ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்
இந்த காலத்தில் பெரும்பாலும் மக்கள் கையில் ரொக்கத்தை வைத்திருப்பதில்லை. சில்லறை பிரச்சினை தொடங்கி திருட்டு பயம் வரை ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பதால் ரொக்கத்திற்குப் பதிலாக யுபிஐ மூலமாகவே பணத்தைச் செலவழிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே கர்நாடகாவில் பல சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி நோட்டீஸ்
அப்படியொரு சம்பவம் குறித்த தகவல்கள் தான் இப்போது வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் ஹாவேரியைச் சேர்ந்த சங்கர்கௌடா ஹடிமணி, முனிசிபல் உயர்நிலைப் பள்ளி மைதானத்திற்கு அருகில் சிறிய காய்கறிக் கடை நடத்தி வருகிறார். ஜிஎஸ்டி விதிகளின் கீழ் ரூ.29 லட்சம் செலுத்த வேண்டும் என்று இவருக்கு வந்த நோட்டீஸை பார்த்து இவர் ஒரு நொடி அதிர்ந்து போய்விட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக சங்கர்கௌடா காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார். அவருடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் பேமெண்ட்கள் மூலமாகவே பணத்தைச் செலுத்துகிறார்களாம். அவர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரொக்கம் அல்லது யுபிஐ என எதுவாக இருந்தாலும் ஓகே என்றே இருந்திருக்கிறார்.
ரூ.29 லட்சம் கட்டணும்
சமீபத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியபோதுதான் பிரச்சினை தொடங்கியது. அதில் அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1.63 கோடிக்குப் பரிவர்த்தனை செய்துள்ளதாகவும், தற்போது ஜிஎஸ்டியாக ரூ.29 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்தவுடன் அவர் ஒரு நொடி ஆடிப்போய்விட்டார்.
ஒன்னுமே புரியல
இது குறித்து சங்கர்கௌடா கூறுகையில், "விவசாயிகளிடம் இருந்து நான் நேரடியாகக் காய்கறிகளை வாங்கி வந்து, எனது சிறிய கடையில் விற்பனை செய்கிறேன்.. பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் ரொக்கம் இருப்பதில்லை. அவர்கள் யுபிஐ மூலமாகவே பணத்தைச் செலுத்துகிறார்கள். இது மட்டுமில்லை.. நானும் ஒவ்வொரு ஆண்டும் முறையாக வருமான வரி தாக்கல் செய்து வருகிறேன். எல்லாவற்றுக்கும் சரியான ஆவணங்கள் உள்ளன. அப்படியிருக்கும் போது திடீரென ரூ.29 லட்சத்தைக் கட்ட சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையை என்னால் ஏற்பாடு செய்ய முடியாது" என்று தெரிவித்தார்.
இதில் விஷயம் என்னவென்றால் காய்கறிகளை விற்பனை செய்யும்போது அதற்கு ஜிஎஸ்டி வரி இல்லை. அப்படியிருக்கும்போது தனக்கு ஏன் ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்தது என்பது தனக்குப் புரியவில்லை என்கிறார் சங்கர்கௌடா ஹடிமணி. மேலும் அடுத்து என்ன செய்வதென்றே புரியவில்லை என்றும் சங்கர்கௌடா ஹடிமணி வேதனை தெரிவித்துள்ளார்.
கர்நாடக அதிகாரிகள்
சமீபத்தில் தான் கர்நாடக ஜிஎஸ்டி துறை டிஜிட்டல் பரிவர்த்தனைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறியிருந்தது. ஜிஎஸ்டி வரம்பை மீறும் வணிகர்கள் பதிவு செய்து வரி செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறியிருந்தது. அதன் பிறகே பல சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் பறந்துள்ளது. இதையடுத்து சங்கர்கௌடா உள்ளிட்ட பல சிறு வணிகர்கள் யுபிஐ மூலம் பணம் வாங்குவதையே நிறுத்திவிட்டனர். கேஷ் மட்டுமே பெறுவோம் என அறிவித்துவிட்டனர்.
யுபிஐ வேண்டவே வேண்டாம்
அதேநேரம் இதுபோல வணிகர்கள் நோட்டீஸுக்கு பிறகு யுபிஐ-ஐ தவிர்த்து ரொக்கத்திற்கு மாறுவது தங்களுக்குத் தெரியும் என்றும் யுபிஐ அல்லது ரொக்கம் என எதுவாக இருந்தாலும் பெறப்பட்ட மொத்தப் பணம் உச்சவரம்பைத் தாண்டினால் வரி செலுத்த வேண்டும் என கர்நாடக ஜிஎஸ்டி துறை எச்சரித்துள்ளது. வணிகர்கள் தங்கள் உண்மையான வருமானத்தை மறைக்க முயன்றால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இதுபோல எடுக்கப்படும் நடவடிக்கையால் சிறு குறு முதலீட்டாளர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இனி யுபிஐ மூலம் பணத்தைத் தொடர்ந்து வாங்கலாமா இல்லை வேண்டாமா என்பது புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications