கப்சிப்.. ஜேடிஎஸ்ஸை துளியும் சீண்டாத பிரதமர் மோடி.. அப்போ அதுதானா? கர்நாடகாவில் விழிக்கும் காங்.
கர்நாடகாவில் பெங்களூர்-மைசூர் விரைவு சாலை திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தபோது காங்கிரஸை அவர் கடுமையாக விமர்சித்த நிலையில் ஜேடிஎஸ் கட்சியில் குடும்பத்தினர் பதவிகளை அனுபவித்தாலும் அதுபற்றி பிரதமர் ஒரு வார்த
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் பெங்களூர்-மைசூர் 10 வழி விரைவு சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் வாரிசு அரசியல் நிறைந்து இருக்கும் ஜேடிஎஸ் கட்சி பற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் இந்த செயலுக்கு பின்னால் பெரிய காரணம் உள்ளதாக கூறப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி உற்று கவனிக்க தொடங்கி உள்ளது. இதன் பின்னணி விபரம் வருமாறு:
கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கர்நாடகா சென்று வருவதோடு பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளை அவர் துவக்கி வைக்கிறார். மேலும் புதிய பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டி வருகிறார்.
கர்நாடகா மாநிலத்துக்கு வரும் மே மாதம் தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் ஓட்டுப்பதிவு தொடர்பான தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் அங்கு அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணியை தொடங்கிவிட்டன.

அர்ப்பணித்த பிரதமர் மோடி
இந்நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி பெங்களூர்- மைசூர் இடையேயான 10 வழிச்சாலையை தொடங்கி வைத்தார். மண்டியா பெங்களூரு-மைசூரு 10 வழி விரைவுச்சாலையானது ரூ.8,480 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழிகள் நெடுஞ்சாலைகளுக்கு, 4 வழிகள் சர்வீஸ் ரோடுகளாகவும் உள்ளது. இந்த நெடுஞ்சாலையை தான் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன்மூலம் பெங்களூர்-மைசூரு இடையேயான பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறைந்துள்ளன.

காங்கிரஸை சாடிய மோடி
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛இரட்டை என்ஜின் அரசு மாநில வளர்ச்சியை மையப்படுத்தி செயல்படுகிறது. பெங்களூரு - மைசூரு என இரு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்துறை முன்னேறும். கடந்த 9 ஆண்டில் ஏழைகளுக்காக 9 கோடி வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான வீடுகள் கர்நாடக மக்களுக்கு கிடைத்துள்ளன. நான் நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறேன். ஆனால் காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சிகளும் என்னை குழி தோண்டி புதைப்பதிலே குறியாக உள்ளன. இதனால் நாட்டு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்துள்ளது. கர்நாடகாவை வளர்ச்சி அடைய செய்வதில் உறுதியாக இருக்கிறேன்'' என்றார்.

ஜேடிஎஸ்ஸை விமர்சிக்கவே இல்லை
இந்த நிகழ்ச்சி என்பது மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவில் உள்ள கெஜ்ஜலகெரே கிராமத்தில் நடந்தது. இந்த மண்டியா மாவட்டம் ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாகும். கடந்த 2018 தேர்தலில் இங்குள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் ஜேடிஎஸ் கட்சி வெற்றி பெற்றது. இங்கு பாஜக வெற்றி பெற காய்களை நகர்த்தி வரும் நிலையில் பெங்களூர்-மைசூர் விரைவு நெடுஞ்சாலை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்தபோதும், ஜேடிஎஸ் கட்சி குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

குடும்பத்தினரிடம் நிரம்பி வழியும் பதவி
குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என மேடைக்கு மேடை பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் முழங்கி வருகின்றன. ஜேடிஎஸ்ஸை பொறுத்தமட்டில் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அவரது மூத்த மகன் ரேவண்ணா எம்எல்ஏவுாகவும், இளையமகனும், முன்னாள் முதல்வமான குமாரசாமி எம்எல்ஏவாகவும், குமாரசாமியின் மனைவி அனிதா எம்எல்ஏவாகவும், ரேவண்ணாவின் மகன் பிரஜ்வெல் எம்பியாவும், இன்னொரு மகன் சுரஜ் ரேவண்ணா எம்எல்சியாகவும் உள்ளார். இருப்பினும் கூட பிரதமர் மோடி ஜேடிஎஸ் கட்சியை விமர்சனம் செய்யவில்லை. பலருக்கும் இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல் காரணம்
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த செயலுக்கு பின்னணியில் உள்ள முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது. கடந்த 2018 சட்டசபை தேர்தலில் மண்டியாவை கைப்பற்ற காங்கிரஸ்-ஜேடிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியது. அப்போது காங்கிரஸ் சார்பில் சித்தராமையா, தேவேகவுடா, குமாரசாமியை குறிவைத்து விமர்சனம் செய்தார். மண்டியா மாவட்டத்தை பொறுத்தமட்டில் தேவேகவுடாவின் ஒக்கலிகர் சமுதாயத்தினர் தான் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் ஜேடிஎஸ் கட்சியின் தேவேகவுடா, குமாரசாமியை சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்ததை விரும்பவில்லை. இதனால் தான் மண்டியாவில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனை பிரதமர் மோடி நன்கு உணர்ந்துள்ளார். இதனால் தான் ஜேடிஎஸ் கட்சியையும், அந்த கட்சி தலைவர்களையும் பிரதமர் மோடி விமர்சிக்கவில்லை என கூறப்படுகிறது.

2வது காரணம்
மேலும் பாஜக என்பது எடியூரப்பா, பசவராஜ் பொம்மை சார்ந்த லிங்காயத் சமுதாயத்தினருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற பொதுவான பேச்சு கர்நாடகாவில் உள்ளது. ஒக்கலிகர் சமுதாயத்தை கண்டுக்கொள்வது இல்லை என்ற புகாரும் பாஜகவின் மீது உள்ளது. இந்நிலையில் தான் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த தேவேகவுடா மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி பேசாமல் இருக்கும்பட்சத்தில் அது பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாக அமையலாம். இதன்மூலம் பழைய மைசூர் பிராந்தியத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் ஓட்டுக்களை பாஜகவும் பெற முடியும் என அக்கட்சி நம்புகிறது.

3வது காரணம்
மேலும், தற்போதைய சூழலில் நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மாநிலத்தில் தொங்கு சட்டசபை தான் நிலவும் என பல கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது நடந்தால் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் நோக்கத்தில் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கு அந்த கட்சியுடன் கடுமையாக விமர்சிக்காமல் இருப்பதே நல்லது என பாஜக கருதுகிறதாம். இந்த 3 காரணங்களால் தான் பிரதமர் மோடி, ஜேடிஎஸ் கட்சியை விமர்சனம் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications