அந்த அவமானத்தை துடைக்க... முதல்வர் நாற்காலி கனவு நிறைவேற... 76 வயதிலும் துடிக்கும் எடியூரப்பா
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்த அவமானத்தை எப்படியாவது துடைத்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு போராடுகிறார் 76 வயது எடியூரப்பா.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி 104 இடங்களைப் பெற்றது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர் வஜூபாய் வாலா.
இதையடுத்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் எடியூரப்பா. 55 மணிநேரம் முதல்வராக நீடித்த எடியூரப்பா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் சட்டசபையில் உருக்கமாக அழுது உரையாற்றி பதவியை ராஜினாமா செய்தார்.

தொடரும் கூட்டணி ஆட்சி
பின்னர் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி அமைத்தது. எத்தனையோ குடைச்சல்களை பாஜக திரைமறைவில் இருந்து கொடுத்தபோதும் முதல்வர் குமாரசாமி அரசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மத்திய அரசு ஆதரவு
லோக்சபா தேர்தலின் போதே அடங்காத எடியூரப்பா தமது ஆட்டத்தையும் ஆசையையும் வெளிப்படுத்தினார். தேர்தலுக்குப் பின்னர் பாஜக அரசுதான் கர்நாடகாவிலும் அமையும் என்றார். தற்போது மத்தியில் பெரும்பான்மையுடன் பாஜக அரசு தொடருகிறது.

எடியூரப்பாவின் புது கணக்கு
இந்த தைரியத்தில்தான் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை படுஜரூராக நடத்திக் கொண்டிருக்கிறார் எடியூரப்பா. 13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தால் குமாரசாமி அரசு இயல்பாகவே பெரும்பான்மையை இழக்கும்; பாஜக ஆட்சி அமைந்துவிடும்... மீண்டும் முதல்வராகிவிடலாம் என கணக்குப் போட்டு காய்களை நகர்த்தினார்.

ராஜினாமா ஏற்க மறுப்பு
எம்.எல்.ஏக்களை தமது ஏற்பாட்டில் மும்பை ஹோட்டலில் தங்க வைத்திருக்கிறார் எடியூரப்பா. ஆனால் சபாநாயகரோ காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்க மறுத்து பிடிவாதம் காட்டுகிறார்.

முதல்வர் பதவிக்கான போராட்டம்
இதனால் வெறுத்துப் போன எடியூரப்பா தர்ணா, ஆளுநர் சந்திப்பு என அடுத்தடுத்து அதிரடி காட்டுகிறார். பாஜகவில் 75 வயதை தாண்டியவர்கள் ஓரம்கட்டப்பட்டு முதியோர் குழுவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதில் தப்பித்து இருப்பவர்களில் எடியூரப்பா. தற்போது 76 வயதாகும் நிலையில் முதல்வராக கிடைத்த வாய்ப்பை மீண்டும் நழுவ விடக் கூடாது; கடந்த ஆண்டு சந்தித்த அவமானத்தை துடைத்தாக வேண்டும் என இந்த வயதிலும் ஓடி ஓடி கவிழ்ப்பு வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார் எடியூரப்பா.
ஆசை யாரைத்தான் விட்டது!












Click it and Unblock the Notifications