உங்களை அலறவிடும் பிரதமரை பெற்றதே.. மோடியின் தாயார் செய்த ஒரே தவறு! ஆம் ஆத்மிக்கு பாஜக நக்கல் பதிலடி
காந்திநகர்: குஜராத்தில் மிக விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.
குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் டெல்லியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
அதேநேரம் இந்தாண்டு தொடக்கத்தில் டெல்லியை தாண்டி பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து குஜராத்தைக் குறி வைத்து உள்ளது. அங்குக் கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என்று ஆம் ஆத்மி குறி வைத்து உள்ளது.

குஜராத் தேர்தல்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் இதற்காகப் பல முறை குஜராத்திற்குச் சென்று வருகிறார். அங்கு ஆம் ஆத்மிக்கு கணிசமான வாக்கு வங்கியை ஏற்படுத்த கெஜ்ரிவால் தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையே ஆம் ஆத்மியின் குஜராத் தலைவர் கோபால் இத்தாலியா, பிரதமரின் தாயாரைக் கேலி செய்வதாக வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக மிகக் கடுமையாகப் பதிலடியும் கொடுத்து உள்ளது.

கோபால் இத்தாலியா சர்ச்சை
ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியாவின் பழைய வீடியோ ஒன்று நேற்றைய தினம் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. அந்த வீடியோவில் அவர் பிரதமர் மோடியின் 100 வயது தாயார் ஹிராபா மோடியைக் கேலி செய்வது போல உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது, இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டங்களைத் தெரிவித்து உள்ளனர்.

பாஜக பதிலடி
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, "பிரதமரின் தாயார் குறித்து தவறாகப் பேசினால் அரசியல் லாபம் அடையலாம் என்று நீங்கள் நினைத்தால், அது ரொம்பவே தப்பு. இந்த மாபெரும் தவற்றுக்குக் குஜராத் மற்றும் குஜராத்திகள் வரவிருக்கும் தேர்தலில் உங்களுக்குப் பதில் கொடுப்பார்கள்" என்றார். மேலும், ஜெக்ரிவால் வழிகாட்டுதல்படியே கோபால் இத்தாலியா இப்படிப் பேசியதாகவும் ஸ்மிருதி இராணி குற்றஞ்சாட்டினார்.

அவர் செய்த ஒரே குற்றம்
அவர் மட்டுமின்றி பல்வேறு பாஜக தலைவர்களும் ஆம் ஆத்மி கருத்தைக் கடுமையாகச் சாடியுள்ளனர். அரசியலுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத 100 வயது பெண்ணை அசிங்கப்படுத்தும் வகையில் பேசியதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் பாஜகவினர் தெரிவித்து உள்ளனர். மேலும், "உங்கள் (கெஜ்ரிவாலின்) அரசியல் திட்டங்கள் அனைத்தையும் முறியடிக்கும் நரேந்திர மோடியைப் பெற்று எடுத்தது மட்டுமே அவர் செய்த ஒரே குற்றம்"என்று பதிலடி கொடுத்து உள்ளானர்.

களங்கம்
தேர்தலில் வெல்ல கெஜ்ரிவால் இதையெல்லாம் செய்வார் என்றும் இதில் ஆச்சரியப்படவில்லை என்றும் அவர்கள் கூறி உள்ளனர். மேலும், குஜராத் மக்கள், பெண்கள் குறிப்பாகத் தாய்மார்கள் மீது மிகுந்த மரியாதை வைத்து உள்ளனர் என்றும் அதைக் களங்கப்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தனர். இந்து பெண்களையும் கோயில்களையும் களங்கப்படுத்தும் வகையில் பேசுவதையே ஆம் ஆத்மி வாடிக்கையாக வைத்து உள்ளதாகவும் பாஜகவினர் சாடினர்.

விசாரணை
கோபால் இத்தாலியா தொடர்பாகப் பரவும் மற்றொரு வீடியோவில், கோவில்களுக்குச் செல்ல வேண்டாம் என்று பெண்களிடம் கூறுவது கேட்கிறது. இந்தச் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து நேற்றைய தினம் தேசிய மகளிர் ஆணையம் அவரிடம் சுமார் 2.5 மணி நேரம் விசாரணை நடத்தியது. இருப்பினும், ஆம் ஆத்மி இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்தே வருகிறது.












Click it and Unblock the Notifications