யூபிஐ-ஆல் நாக்கு தள்ளுது.. ஏடிஎம் போனால் காசு காலி ஆகுது! பேலன்ஸ் செக் பண்ணாலே இனி 23 ரூபாய் தண்டம்!
சென்னை: தற்போது வங்கிகள் 3 முதல் 5 முறை கட்டணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனை வழங்கி வரும் நிலையில், வரும் மே 1ம் தேதி முதல் மெட்ரோ ஏடிஎம்களில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் 23 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணம் எடுப்பது போன்ற நிதி பரிவர்த்தனைக்கு மட்டுமல்லாது, பேலன்ஸ் செக்கிங், மினி ஸ்டேட்மென்ட், பின் மாற்றம் போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனை ஆகியவற்றுக்கும் ஒட்டுமொத்தமாக பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
யுபிஐ வந்துவிட்ட பிறகு பணப் புழக்கம் மக்களிடையே வெகுவாக குறைந்து இருக்கிறது. டீக்கடைகள் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் மத்திய அரசும் மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனாலும் சிலர் இன்னும் ஏடிஎம்களில் பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு வகையில் அவர்களுக்கு பயனுள்ளதாகவும் சுலபமாகவும் இருப்பதாக கருதுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாகவே யுபிஐ சர்வர் பிரச்சினை காரணமாக பணம் செலுத்துவதிலும் பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு கையில் காசு இல்லாமல் யூபிஐ ஆப்களை நம்பி டீக்கடைகளுக்கோ ஹோட்டல்களுக்கோ சாப்பிட சென்றால், பணம் செலுத்தும் நேரத்தில் நெட்வொர்க் எரர் காரணமாக பணம் செலுத்த முடிவதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர். இதை அடுத்து தற்போது பலரும் மீண்டும் ஏடிஎம்மில் பணம் எடுத்து செலவழிக்க தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் அதற்கும் ஆப்பு வைக்கும் வகையில் புதிய நடைமுறை மே ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தங்கள் வங்கி கணக்கின் வகைக்கு ஏற்ப பணம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாதத்தில் ஐந்து முறை வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் இலவசமாகவும், பிற வங்கிகளில் மூன்று முறை பணம் இன்றியும் ஏடிஎம் வித்ட்ரால் செய்து கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா முழுவதும் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் மே 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகின்றன. இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த எல்லையை மீறினால் விதிக்கப்படும் கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே எச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி போன்றவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய கட்டணங்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளன.
வரும் மே 1 2025 முதல் பெருநகரங்களில் (மெட்ரோ) மாதம் 3 இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
பெருநகரம் இல்லாத பகுதிகளில் (நான்-மெட்ரோ) மாதம் 5 இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இது பணம் எடுப்பது மற்றும் பேலன்ஸ் செக், மினி ஸ்டேட்மென்ட், பின் மாற்றம் போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக பொருந்தும் என்பதால், இந்த இலவச எல்லையை மீறினால் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் 23 + வரிகளோடு வசூலிக்கப்படும்.
இந்த கட்டணங்கள் வழக்கமான ஏடிஎம்களில் மட்டுமல்ல, கேஷ் ரீசைக்கிளர் மெஷின்களிலும் (CRM) பொருந்தும். ஆனால், பணம் செலுத்துவதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எச்டிஎஃப்சி வங்கி மே 1, 2025 முதல், இலவச எல்லையை மீறிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு ரூ.21 + வரிகள் என்பதில் இருந்து ரூ.23 + வரிகள் உட்பட மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பது மட்டுமே கட்டணத்துக்கு உட்படும். பேலன்ஸ் செக், மினி ஸ்டேட்மென்ட், பின் மாற்றம் போன்றவை இலவசம்.
மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பது மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் (ஆகியவற்றுக்கு ரூ.23 + வரிகள் வசூலிக்கப்படும். எனவே மே 1, 2025 முதல் புதிய ஏடிஎம் விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதால், வாடிக்கையாளர்கள் பெருநகரங்களில் மற்ற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். கட்டண உச்சவரம்பு இலவச எல்லையை மீறினால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 + வரிகள் என்ற உச்சவரம்பை நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.












Click it and Unblock the Notifications