ரூ.50000 மேலான ரொக்கத்திற்கு வங்கி பண பரிவர்த்தனை வரி- நாயுடு குழு பரிந்துரை
ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான பணப்பரிவர்த்தனைகளுக்கு, கணிசமான வரி விதிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
கறுப்பு பணம் மற்றும் கள்ளப் பணப் புழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தோடு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும், புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.
இருந்தபோதிலும், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் குறைந்த அளவிலேயே அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டதால், பெரும்பாலான மக்கள் தங்களின் அன்றாட தேவைக்காக பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த நிலைமை 70 நாட்களை கடந்த பின்னரும் இன்னும் சீரடையவில்லை.
மேலும், 50 முதல் 100 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலைமையை சீர் செய்யும் பொருட்டு புதிய 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மின்னணு பரிவர்த்தனை
பொதுமக்களின் சிரமங்களை போக்கும் விதமாகவும், ரொக்க பணப்பரிவர்த்தனையை தவிர்த்துவிட்டு மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்கும்விக்கும் விதமாக கவர்ச்சிகரமான சலுகைகளையும் பரிசுகளையும் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டது.

சந்திரபாபு நாயுடு குழு அறிக்கை
மேலும், இதை ஆராயந்து ஆலோசனைகளை வழங்க மத்திய அரசு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 13 பேர் கொண் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவானது, சமீபத்தில் தங்களின் ஆலோசனை அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது.

வங்கிப் பணப்பரிவத்தனை வரி
இந்தக்குழு அளித்த அறிக்கையில், வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக்கணக்கில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு தொகைக்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு ரொக்கப் பரிவர்த்தனைக்கும் வங்கிப் பணப்பரிவத்தனை வரி (Banking Cash Transaction Tax) விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
கூடுதலாக, மின்னணு பணப்பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கவும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊக்குவிப்பு சலுகை
ஸ்மார்ட்ஃபோன் விற்பனை உள்ளிட்ட சிறு வர்த்தகர்களுக்கு, ரூ.1000 வரை சலுகை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வர்த்தகர்களிடையே பணமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இ பிஓஎஸ் இயந்திரங்களை நிறுவ வங்கிகள் முயற்சிக்க வேண்டும். அத்துடன், ஸ்மார்ட்ஃபோன் வழியான பரிவர்த்தனைகளையும் அதிகளவில் ஊக்குவிக்க முன்வர வேண்டும் என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்ப்பு வருமா?
வங்கிப் பணப்பரிவர்த்தனை வரி விதிக்கும் முறையானது முதன்முறையாக கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு 0.10 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளால், இந்தத் திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.

நோக்கம் வெல்லுமா?
தற்போது, மீண்டும் வங்கிப் பணப் பரிவர்த்தனை வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால், அது ரொக்கப் பணப்பரிவர்த்தனையை கட்டுப்படுத்துவதோடு, மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும், உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம் வெற்றி அடையவும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டமைப்பு வசதிகள்
இதனை உணர்ந்த மத்திய அரசும், தற்போது முதல்கட்டமாக, பொதுத்துறை நிறுவனமான காப்பீட்டு கழகம் மற்றும் பெட்ரோல் பங்க்குகளிலும் மின்னணு பணப்பரிவர்த்தனை முறையை மேற்கொள்ளுமாறு அறிவுறித்துள்ளது. மின்னணு பணப்பரிவர்த்தனை முறையை மேம்படுத்த, தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நாயுடு குழு பரிந்துரை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications