தங்கம் இருக்கட்டும் விடுங்க.. இந்த பிட்காயின் விலையை பாருங்க.. எங்கேயோ உச்சத்துக்கு போயிடுச்சு
டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அதன் தாக்கம் சர்வதேச அளவில் எதிரொலித்து வருகிறது. ஒரு பக்கம் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மற்றொருபுறம் பிட்காயின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது இப்போது வெள்ளியின் சந்தையை ஓவர்டேக் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பில் எப்போதும் முதலில் இருப்பது தங்கம் தான்.. ஆபத்தான காலத்தில் தங்கம் உதவும் என்பதால் பொதுமக்கள் சிறுக சிறுக சேமித்து எப்போதுமே தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள்.

ஆனால், கொரோனாவுக்கு பிறகு தங்கம் விலை எங்கோ சென்றுவிட்டது. இதனால் பொதுமக்களால் ஈஸியாக தங்கம் வாங்க முடியாமல் போனது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் டிரம்ப்பின் வெற்றிக்குப் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
தங்கம்: கடந்த 10 நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ. 285 வரை குறைந்துள்ளது. கடந்த நவ. 3ம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7370ஆக இருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த நவ. 5ம் தேதி முதல் தொடர்ந்து சரியும் தங்கம் இப்போது ஒரு கிராம் ரூ. 7085ஆக குறைந்துள்ளது. சமீப காலங்களில் இந்தளவுக்குத் தங்கம் விலை குறைந்ததே இல்லை.. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பெற்ற வெற்றியே இதற்குக் காரணமாகும்.
பிட்காயின்: அதேநேரம் மறுபுறம் பிட்காயின் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் பிட்காயின் விலை 90,000 டாலர் அதாவது 75.95 லட்சத்தை நெருங்குகிறது. கிரிப்டோ கரன்சிகளை ஆதரிக்கப் போவதாக டிரம்ப் சொன்னதே இதற்குக் காரணமாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிட்காயின் விலை 10%க்கு மேல் உயர்ந்துள்ளது. இன்று காலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பிட்காயின் விலை 89,604 டாலரை எட்டியது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 75.62 லட்சத்தை எட்டியது. இதனால் வரும் நாட்களிலும் பிட் காயின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
வெள்ளியை விட அதிகம்: இதன் மூலம் பிட்காயினின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.75 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த வெள்ளியின் சந்தை மதிப்பை விட அதிகமாகும். உலகெங்கும் இப்போது வெள்ளியின் சந்தை மதிப்பு 1.729 டிரில்லியன் டாலராக இருக்கும் நிலையில், அதை ஓவர்டேக் செய்து பிட்காயின் சந்தை மதிப்பு 1.75 டிரில்லியனை தொட்டுள்ளது. டிரம்பின் வருகை கிரிப்டோ சந்தைகளை எந்தளவுக்கு ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இது தொடர்பாக பை42 நிறுவனத்தின் சிஇஓ அவினாஷ் சேகர் கூறுகையில், "பிட்காயின் இப்போது வெள்ளியை ஓவர்டேக் செய்துள்ளது. இதன் மூலம் எட்டாவது மிக பெரிய சொத்தாக பிட்காயின் மாறியிருக்கிறது. பிட்காயின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே நினைக்கிறோம். அது 75 ஆயிரம் டாலரை வரை அதிகரிக்கும். பிறகுச் சற்று குறைந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும். பிட்காயின் நிச்சயம் ஒரு லட்சம் டாலரை தொடும்" என்று தெரிவித்தார்.
ஆபத்தும் இருக்கு: அதேநேரம் பிட்காயின் என்பது எந்தவொரு ரெகுலேஷனுக்கு கீழும் வராது. அதாவது இதில் சிக்கல் என்றால் யாரிடமும் முறையிட முடியாது. அதேபோல பிட்காயின் சந்தை மிகப் பெரியளவில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் என்பதால் இதில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு முறைக்குப் பல முறை யோசியுங்கள். உங்கள் பொருளாதார ஆலோசகரிடமும் ஆலோசனை பெறுங்கள்.












Click it and Unblock the Notifications