இனி தங்கத்தை வாங்கவே முடியாது போல! உச்சம் தொடும் தங்கம் விலை.. என்ன காரணம்! பின்னணியில் உலக நாடுகள்?
சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாகப் பட்டியலிடும் வல்லுநர்கள், தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும் போது வரும் காலங்களில் இந்த நிலை மாற வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து விளக்குகிறார்கள்.
கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.57,120க்கு விற்பனை செய்யப்பட்டது.

3 காரணங்கள் இருக்கு: இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது. அதேபோல 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இப்படி புதிய உச்சம் தொட 3 காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்கான காரணங்களை நாம் பார்க்கலாம்.
உலக நாடுகள்: முதலில் உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் இதுவரை இல்லாத வகையில் தங்கத்தை வாங்கி குவிக்கிறது. கடந்த காலங்களில் பொதுவாக டாலரையே உலக நாடுகள் வாங்கும். ஆனால், ரஷ்யா- உக்ரைன் மோதலுக்குப் பிறகு டாலரை பயன்படுத்த ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பல நாடுகளும் டாலரில் இருந்து விலகித் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி இருக்கிறது.
குறிப்பாக அமெரிக்கா உடன் நல்லுறவைக் கொண்டிராத நாடுகள் வரும் காலத்தில் இதுபோன்ற தடை தங்கள் மீது விதிக்கப்பட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, முதலீடுகளைத் தங்கம் பக்கம் திரும்பியுள்ளன. இதனால் ரஷ்யா, சீனா, துருக்கி ஈரான் உள்ளிட்ட நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. குறிப்பாகச் சீனா கடந்த 10 மாதங்களில் தங்கத்தை இதுவரை இல்லாத அளவுக்கு வாங்கி குவித்து வருகிறது.
இந்த நாடுகள் மட்டுமின்றி இந்தியா, பிரேசில், சிங்கப்பூர் நாடுகளின் மத்திய வங்கியும் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறதாம். கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளதாம். இதுவே உலக நாடுகள் எந்தளவுக்குத் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது என்பதையே காட்டும் வகையில் உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி: அடுத்து அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு சார்ந்தது. அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியை அதிகரிக்கும் போது தங்கம் விலை குறையும்.. வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை அதிகரிக்கும். அமெரிக்க மத்திய வங்கி ஏற்கனவே இனிமேல் தனது வட்டி விகிதத்தை உயர்த்த போவதில்லை என்று அறிவித்துவிட்டது. ஒரு முறை வட்டி விகிதத்தைக் குறைத்தும் விட்டது. வரும் வாதங்களில் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கவே வாய்ப்பு இருக்கிறது. இது நடந்தால் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்.
இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் போது, கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அதேநேரம் வட்டி விகிதம் குறையும் போது, லாபம் பெரிதாக வராது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் இதுவே முக்கியமான காரணமாகும்" என்கிறார்கள்.
சர்வதேச பதற்றம்: அதேபோல சர்வதேச அளவில் நிலவும் பதற்றமும் முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் வரக் காரணமாக இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் மோதல், இஸ்ரேல் ஹமாஸ் போர், இஸ்ரேல் ஹிஸ்புல்லா தாக்குதல், இஸ்ரேல் ஈரான் பதற்றம், இது தவிரச் சீனா- தைவான் பிரச்சினை என்று உலகில் எங்குத் திரும்பினாலும் மோதல் போக்கே நிலவி வருகிறது.
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இதுபோன்ற புவிசார் பதற்றங்கள் இருக்கும்போது, மற்ற விஷயங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயங்குவார்கள். தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி முதலீடு செய்வார்கள். இப்போதும் அதுவே தான் நடக்கிறது. இந்த மூன்று காரணங்கள் தான் தங்கம் விலை அதிகரிக்க இப்போது முக்கிய காரணங்களாக உள்ளன. தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும் போது தங்கம் விலை குறைய வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications