பறக்கும் "தங்கம்" விலை.. அடுத்து இதுதான் டார்கெட்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேட்டாலே தலை சுத்துதே
சென்னை: தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஏற்கனவே 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8000ஐ தாண்டிவிட்டது.. தங்கத்தை இனி நினைக்க மட்டுமே முடியும் என்ற அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். தங்கத்தின் போக்கு வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் உயரத் தொடங்கிய தங்கம் அதன் பிறகு இறங்கவே இல்லை. இடையில் டிரம்ப் தேர்தலில் வென்ற போது சில காலம் மட்டுமே தங்கம் குறைந்த நிலையில், மீண்டும் தொடர்ச்சியாக அது உயர்ந்தே வருகிறது.

தங்கம் விலை:
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டு சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதனால் ஏழை மட்டுமின்றி மிடில் கிளாஸ் மக்களால் கூட தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் (பிப்ரவரி 11) சென்னையில் 22 கேரட் தங்கம் விலை முதல்முறையாக ரூ.8000ஐ கடந்துள்ளது.
இந்தளவுக்குத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் இது தொடர்பாகப் பிரபல பொருளாதார ஆலோசகரான ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது வெறும் தொடக்கம் தான் எனச் சொல்லும் ஆனந்த் சீனிவாசன், வரும் காலங்களிலும் தங்கம் விலை உயரவே செய்யும் எனச் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்:
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "22 கேரட் தங்கம் விலை ரூ.8000ஐ கடந்துவிட்டது. நீங்கள் தங்கத்தை காயினாக வாங்க வேண்டும் என்றால் இப்போதே ரூ.8500 தர வேண்டி இருக்கும். நமது முதல் டார்கெட்டை அது அடைந்துவிட்டது. 24 கேரட் தங்கம் ரூ.9000ஐ தாண்டிவிட்டது. இப்போது தங்கம் விலை அடுத்து என்னவாகும் என்பதே பலருக்கும் உள்ள கேள்வியாக இருக்கிறது.
அடுத்த டார்கெட்:
தங்கத்திற்கான டார்கெட்டை ரூ.10 ஆயிரமாக உயர்த்திக் கொள்ளுங்கள். டிரம்ப் செய்வதைப் பார்த்தால் நிச்சயம் தங்கத்தை ரூ.10 ஆயிரத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டுவார் என்றே நினைக்கிறேன். இரண்டு ஆண்டுகளில் தங்கம் விலை இந்த நிலையை அடைந்துவிடும். இடையில் எதாவது தங்கம் விலை சற்று குறைந்தால் அவ்வப்போது வாங்கிக் கொண்டே இருங்கள். குறையும் என்றால் ரொம்ப குறையாது. ரூ.100 அல்லது ரூ.200 மட்டுமே குறையும். அப்போதெல்லாம் தங்கம் வாங்குவது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம். தங்கம் விலை உயர்வதால் தங்கம் தொடர்பான பங்குகள் விலையும் அதிகரிக்கவே செய்யும்.
என்ன நடக்கும்:
நிலைமை இப்படி இருப்பதால் நாம் தங்கத்தைப் பற்றிக் கவலைப்படவே வேண்டாம்.. அமெரிக்காவிலேயே தங்கம் விலை உயர்ந்து ஒரு அவன்ஸ் தங்கம் 3000 டாலரை தாண்டும் என்கிறார்கள். ஒருவேளை அப்படி 3000 டாலரை தாண்டினால் நமது நாட்டிலேயே அதன் விலை ரூ.8500 + ஜிஎஸ்டி என்று ஆகிவிடும். மொத்தமாகப் பார்த்தால் ரூ.9000 அருகே வந்துவிடும். மறுபுறம் ரூபாய் மதிப்பும் கூட வேகமாகச் சரிந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் மார்ச் மாதத்திற்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 88ஆகிவிடும். தங்கம் விலை உயர இதுவும் ஒரு காரணம்.
இதுவரை என்ன நடந்தது:
நான் சொன்னது தான் அப்படியே நடந்து வருகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநரான பிறகு மல்ஹோத்ரா வட்டி விகிதத்தைக் குறைப்பார் என்றேன் குறைத்தார்.. பங்குச்சந்தை விழும் என்றேன் விழுந்துள்ளது.. ரூபாய் மதிப்பு சரியும் என்றேன் சரிந்துவிட்டது. தங்கம் விலை உயரும் என்றேன். அதுவும் நடந்துவிட்டது. எதை எதை எப்போது செய்ய வேண்டும் என ஒன்று இருக்கிறது. தப்பான நேரத்தில் வட்டி விகிதத்தைக் குறைத்தால் இதுவே நடக்கும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications