தங்கம் விலை 2 நாட்களாக குறையுது ஓகே.. ஆனா இதன் பிறகு என்ன நடக்கும்! வெடியை வீசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாகச் சரியத் தொடங்கியுள்ள நிலையில், இது நெட்டிசன்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தங்கம் விலை வரும் காலத்தில் குறையுமா.. அப்படிக் குறைந்தால் எந்தளவுக்குக் குறையும்.. இல்லை அப்படியே யூடர்ன் போட்டு விலை அதிகரிக்குமா என மக்களுக்குப் பல சந்தேகங்கள் உள்ளன. இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளிக்கிறார்.
நமது நாட்டில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கம் என மாறிமாறி இருந்து வருகிறது. கடந்த நவ. 23ம் தேதி 22 கேரட் தங்கம் விலை அதிகபட்சமாக ரூ. 7300ஆக இருந்தது.

ஆனால், அதன் பிறகு சட்டென சரிந்து, இப்போது ஒரு கிராம் ரூ. 7080ஆக இருக்கிறது. தங்கம் விலை இப்படிச் சட்டென சரிய என்ன காரணம். இது மேலும் எவ்வளவு குறையும்.. ஒருவேளை அதிகரித்தால் எவ்வளவு அதிகரிக்கும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை சர்வதேச சந்தையில் பெரியளவில் டமால் எனச் சரிந்துள்ளது. ஆனால், நமது ரூபாய் மதிப்பும் சரிவதால் இந்தியாவில் அந்தளவுக்குத் தங்கம் விலை குறையவில்லை. சற்று குறைவாகவே தங்கம் விலை சரிந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நேற்று தங்கம் விலை 3% குறைந்து இருந்தது. ஆனால், நமது நாட்டில் அந்தளவுக்குக் குறையவில்லை. ஒரு கிராமுக்கு ரூ.120 மட்டுமே குறைந்து இருந்தது. நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6950 வரை செல்லும் என நினைத்தேன். ஆனால், ரூ. 7080ஆக மட்டுமே இருக்கிறது.
காரணம்: தங்கம் விலை குறைய ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்கிறார்கள். இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதால் போர் முடிந்துவிடும் என ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் ஸ்காட் பெசென்ட் என்பவரை டிரம்ப் டிரஸரி துறைக்கு நியமித்துள்ளார். அவர் வந்ததால் தங்கம் விலை குறைந்துள்ளது என்று ஒரு பக்கம் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் வட்டி விகிதம் குறைப்பு வருமா இல்லையா என்றும் விவாதம் நடந்து வருகிறது.
டிரம்ப் தான் சிக்கல்: உண்மையான பிரச்சினை என்னவென்றால் டிரம்ப் தான். அவர் உள்நாட்டில் மத்திய வங்கியின் வரி வித்தைக் குறைப்பார். அப்படிச் செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும். அதேபோல வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிப்பார். அப்படிச் செய்தாலும் அதனால் பணவீக்கம் அதிகரிக்கவே செய்யும். இப்படி இரண்டில் எது நடந்தாலும் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும். எனவே, அடுத்த 4 ஆண்டுகளிலும் சரி, 18 மாதங்களிலும் சரி தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்.
இதுபோக அவர் மெக்சிகோ, கனடா நாடுகள் மீது வேறு 25% வரி போடுவதாகச் சொல்கிறார். சட்ட விரோதமாகக் குடியேறுவோர், போதைப் பொருளை அனுப்புவதால் இரு நாடுகள் மீது வரி போடுகிறாராம். ஆனால், உண்மையில் இரண்டுக்கும் தொடர்பே இல்லை. மேலும் சீனா மீதும் 10% வரி போடுவாராம். இப்படி வரி எல்லாம் போட்டால் விலைவாசி அதிகரிக்கவே செய்யும். இதனால் தங்கம் விலை உயரவே செய்யவும்" என்றார்.
வெடியை வீசிய ஆனந்த் சீனிவாசன்: அதேபோல மற்றொரு வீடியோவில் அவர், "தங்கம் விலை கடந்த வாரம் கணிசமாக அதிகரித்து இருந்தது. இந்தாண்டு இடையில் சில காலம் தங்கம் விலை சரிந்தது. ஆனால் அதை விட்டுவிட்டுப் பார்த்தாலும் கூட தங்கம் விலை இந்தாண்டு மட்டும் 30% உயர்ந்துள்ளது. இப்போது முக்கியமான விஷயம் என்னவென்றால் சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்க ஆரம்பித்துவிட்டனர். இதன் தங்கம் விலை பெரியளவில் விழாது. அதேநேரம் அது உயரவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
நமது நாட்டின் ரிசர்வ் வங்கி கூட கடந்த சில மாதங்களின் கணிசமான அளவுக்குத் தங்கத்தை வாங்கியுள்ளது. சீனா, ரஷ்யா நாடுகள் அளவுக்கு அதிகமாகவே தங்கத்தை வாங்கியுள்ளன. இது இன்று விஷயம்" என்று அவர் தெரிவித்தார். அதேபோல மற்றொரு வீடியோவில் தங்கம் விலை அடுத்த 18 மாதங்களில் ரூ. 8500 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications