மியூச்சுவல் ஃபண்ட் 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக 40% சரிவு.. சாமானிய முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீட்டாளர்களின் நிகர வரவு ஏப்ரல் மாதத்தில் ரூ.38 ஆயிரத்து 440 கோடியாக இருந்தது. ஆனால் மே மாதத்தில் ரூ.22 ஆயிரத்து 908 கோடியாகக் குறைந்துள்ளது. இது மாதாந்திர அடிப்படையில் 40.4 சதவீத சரிவாகும். மேலும், கடந்த ஓராண்டில் பதிவான மிகக் குறைந்த மாதாந்திர முதலீடாகவும், கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக பங்கு சந்தை நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.

அண்மைக் காலமாக உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகள் இந்திய நிதிச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் பங்கு சந்தைகளை பாதித்துள்ளன. இதன் நேரடி விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதுடன், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

Why Mutual Fund Inflow Dropped 40 amp amp What Should Retail Investors Do

கடந்த சில தினங்களுக்கு முன் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 50 காசுகள் சரிந்து, ரூ. 95.75 ஆக நிலைபெற்றது இச்சூழலின் தீவிரத்தைக் காட்டுகிறது. இந்த உலகளாவிய பதற்றத்தால் நிலைகுலைந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியப் பங்குச்சந்தைகளில் தாங்கள் மேற்கொண்டிருந்த முதலீடுகளைத் தற்காலிகமாகத் திரும்பப் பெற்று வருகின்றனர். இத்தகைய காரணங்களால் இந்தியப் பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாகக் கடுமையான ஏற்றத்தாழ்வுகளையும், மந்தநிலையையும் எதிர்கொண்டு வருகிறது.

பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) என்றால் என்ன?

மிகவும் எளிமையாகச் சொன்னால், இது ஒரு 'கூட்டு முதலீடு'. உங்களிடம் பங்குச்சந்தையைப் பற்றிப் படிக்க நேரமோ அல்லது எந்தப் பங்குகளை வாங்குவது என்ற போதிய அறிவோ இல்லை என்று வைத்துக்கொள்வோம். உங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான சாமானியர்களிடம் இருந்து சிறு சிறு தொகைகளைத் திரட்டி, ஒரு பெரிய நிதியாக (Fund) உருவாக்குவார்கள்.

இந்த நிதியை நிர்வகிக்க 'Fund Manager' எனப்படும் ஒரு தகுதியான பொருளாதார நிபுணர் இருப்பார். அவர் அந்தப் பணத்தைப் பிரித்து, லாபம் தரக்கூடிய பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வார். இதில் கிடைக்கும் லாபம், முதலீட்டாளர்களுக்குப் பிரித்து வழங்கப்படும். நீங்களே நேரடியாகப் பங்குச்சந்தையில் இறங்கி ரிஸ்க் எடுப்பதற்குப் பதிலாக, ஒரு நிபுணரின் கையில் பணத்தைக் கொடுத்து முதலீடு செய்ய வைப்பதே பரஸ்பர நிதி.

முதலீடுகள் திடீரென 40% சரிந்தது ஏன்?

இதற்குக் காரணம் நடுத்தர வர்க்க முதலீட்டாளர்கள் அல்ல; ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யு பெரிய மனிதர்கள் தான். சந்தை தொடர்ந்து ஏறி இறங்கி நிலையற்றதாக இருப்பதால், பெரிய தொகையை முதலீடு செய்பவர்கள், "சந்தை கொஞ்சம் சீராகட்டும், அதுவரை பொறுத்திருப்போம்" என்று தங்களது புதிய முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை எடுப்பதைப் பார்த்து, நம்மூர் முதலீட்டாளர்களிடமும் ஒருவித எச்சரிக்கை உணர்வும், பயமும் தொற்றிக் கொண்டதுதான் இந்த 40% சரிவுக்கு முக்கியக் காரணம்.

'சிப்' (SIP) முதலீட்டாளர்களின் அசாத்திய நம்பிக்கை

இங்குதான் ஒரு சுவாரசியமான விஷயம் நடந்துள்ளது. பெரிய முதலீடுகள் சரிந்தாலும், நடுத்தர வர்க்க மக்களின் மாதாந்திர தவணை முதலீட்டுத் திட்டமான SIP (Systematic Investment Plan) எனப்படும் 'சிப்' எனப்படும் எஸ்ஐபி முதலீடுகள் இந்தச் சந்தை வீழ்ச்சியிலும் பாறையைப் போல உறுதியாக நிற்கின்றன.
ஏப்ரலில் ரூ.31,115 கோடியாக இருந்த சிப் வரவு, மே மாதத்தில் மிகச்சிறிய சரிவுடன் ரூ.30,954 கோடியாக அப்படியே நிலைபெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சிப் கணக்குகளின் எண்ணிக்கை 9.64 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

சந்தை சரிந்தாலும், "நாம மாசம் மாசம் போடுற 1000, 2000 ரூபாயை நிறுத்தக் கூடாது" என்பதில் சாமானிய முதலீட்டாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். சிப் வரவு தொடர்ந்து 30 ஆயிரம் கோடிக்கு மேல் நீடிப்பது, சந்தையின் மீது மக்களுக்கு இருக்கும் நீண்டகால நம்பிக்கையைக் காட்டுகிறது என்று பொருளாதார அதிகாரிகள் பெருமிதத்துடன் கூறுகிறார்கள்.

இன்னும் பரஸ்பர நிதியை மக்கள் நம்புவது ஏன்?

பங்குச்சந்தை சரிந்தாலும், ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக நேற்றைய தினம் 50 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூ.95.75 ஆகக் குறைந்தாலும், மக்கள் ஏன் இன்னும் மியூச்சுவல் ஃபண்டுகளை நம்புகிறார்கள் தெரியுமா? பங்குச்சந்தை சரியும்போது பங்குகளின் விலை குறையும். ஒரு துணிக்கடையில் ஆடித் தள்ளுபடி போட்டால் ஓடிப் போய் எடுப்பதைப் போல, சந்தை சரியும்போது பரஸ்பர நிதியின் யூனிட்டுகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும். "இப்ப மலிவா வாங்கி வச்சா, பின்னாடி சந்தை ஏறும்போது அள்ளிக்கலாம்" என்கிற சாதுரியம் மக்களுக்கு வந்துவிட்டது. வரலாறு காட்டும் உண்மை என்னவென்றால், குறுகிய காலத்தில் போர், அரசியல் மாற்றங்களால் சந்தை சரிந்தாலும், 5 அல்லது 10 ஆண்டுகள் என்று நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது மியூச்சுவல் ஃபண்டுகள் மற்ற சேமிப்புகளை (FD, தங்கம்) விடச் சிறந்த லாபத்தையே கொடுத்துள்ளன.

இதுபற்றி பொருளாதார நிபுணர்கள் கூறுகையல் நீங்கள் மாதாந்திர 'SIP' முறையில் முதலீடு செய்பவர் என்றால், தற்போதைய சரிவைக் கண்டு பயந்து அதை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடாதீர்கள். சந்தை சரிவில் இருக்கும்போதுதான் உங்கள் பணத்திற்கு அதிக யூனிட்டுகள் கிடைக்கும்.
அவசரத் தேவை இருந்தால் ஒழிய, சந்தை நஷ்டத்தில் இருக்கும்போது உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை வெளியே எடுக்காதீர்கள். பொறுமையாக இருந்தால் சந்தை மீண்டும் உச்சத்தைத் தொடும். உங்களிடம் உபரிப் பணம் இருந்தால், இந்தச் சரிவைப் பயன்படுத்தி நல்ல பரஸ்பர நிதித் திட்டங்களில் கூடுதலாக முதலீடு செய்யலாம். கடலில் அலைகள் எழுவதும் விழுவதும் இயற்கை. அதற்காகக் கரையில் நிற்பவர் கடலையே பார்த்து பயப்படத் தேவையில்லை. பங்குச்சந்தை சரிவு என்பது தற்காலிகக் காற்று; மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது நீண்ட தூரப் பயணம். நிதானம் காப்பதே லாபம் தரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பு: பங்கு சந்தை தொடர்பான செய்தி மட்டுமே.. இதனை ஆலோசனையாக பார்க்க வேண்டும்.. பங்கு சந்தையில் நிதி முதலீடு செய்யும் விஷயத்தில் நீங்களே சுய முடிவு எடுங்கள். யாருடைய ஆலோசனையையும் நம்பி இறங்கிவிட வேண்டாம். அதேநேரம் செபியில் அங்கீகாரம் பெற்ற பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசனை செய்யலாம். ஆனால்முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும். ஏனெனில் நிதி அபாயம் கண்டிப்பாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+