"உடலில் பேய் இருக்கு".. பிசாசை விரட்டுவதாக பாதிரியார் செய்த கொடூரம்.. மயங்கி விழுந்து வாலிபர் பலி
சண்டிகர்: பேய் விரட்டுவதாக கூறி 30 வயது இளைஞரை கூட்டாளிகளுடன் சேர்ந்து பாதிரியார் தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.
பேய்.. பிசாசு உள்ளது என்று சிறுவயதில் நம்மை பயம்காட்டி வைக்க பெரியவர்கள் சொல்வது உண்டு. ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கான பதில் யாரிடமும் இல்லை. இதனால் பேய், பிசாசு என சொல்வது அனைத்தும் கட்டுக்கதை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் இன்னொரு தரப்போ பேய், பிசாசு உள்ளது என கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் புகுந்த பேய், பிசாசை விரட்டுவதாக கூறி சிலர் பணமும் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது பேய் விரட்டுவதாக கூறி பாதிரியார் ஒருவர் செய்த சம்பவம் 30 வயது இளைஞரின் உயிரையே பறித்துள்ளது. அந்த சம்பவம் எங்கு நடந்தது? பாதிரியார் என்ன செய்தார்? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. மாத்திரை, மருந்துகள் எடுத்து கொண்டாலும் கூட அவரது உடல்நிலை மட்டும் சரியாகவில்லை.
இதற்கிடையே தான் சாமுவேலுக்கு ‛பேய்' பிடித்து இருக்கலாம் என்று குடும்பத்தினர் நினைத்தனர். அதோடு சாமுவேல் உடலில் உள்ள பேயை விரட்டினால் அவர் குணமாகி மீண்டு வருவார் என நினைத்தனர். இதுதொடர்பாக அவர்கள் பாதிரியார் ஜேக்கப்பை சந்தித்து பேசினர். இதையடுத்து கடந்த 21ம் தேதி சாமுவேல் வீட்டுக்கு பாதிரியார் ஜேக்கப் சென்றார். அப்போது சாமுவேலை பார்த்த பாதிரியார் ஜேக்கப், அவருக்கு பேய் பிடித்துள்ளதாகவும், தான் செய்யப்போகும் பிரார்த்தனையில் சாமுவேல் உடலை விட்டு பேய் வெளியேறும் என்றும் கூறினார்.
அதன்பிறகு சாமுவேலை பாதிரியார் ஜேக்கப் மற்றும் அவருடன் வந்தவர்கள் பேய் விரட்டுவதாக கூறி தாக்கினர். இதனால் கட்டிலில் அப்படியே சாமுவேல் மயங்கி விழுந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சாமுவேலை மயக்கத்தில் இருந்து எழுப்ப குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் அவர் எழவே இல்லை. அப்போது தான் பாதிரியார் ஜேக்கப் உள்ளிட்டவர்கள் தாக்கியதில் சாமுவேல் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாதிரியார் ஜேக்கப் உள்ளிட்டவர்கள் சாமுவேலின் குடும்பத்தினரை சமாதானம் செய்து அவரது உடலை புதைக்க வைத்தனர். ஆனாலும் மகன் சாமுவேலை இழந்த பெற்றோர் சம்பவம் குறித்து தாமதமாக பாதிரியார் ஜேக்கப் மீது போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் பாதிரியார் ஜேக்கப் அவரது கூட்டாளிகளான பால்ஜித் சிங் சோனு உள்பட மொத்தம் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புதைக்கப்பட்ட சாமுவேலின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications