யாரு.. ராகுல் காந்தியா? அவரு 'டிஸ்னி லேண்ட்' இளவரசராச்சே.. என்ன பாஜக இப்படி சொல்லுது?
சண்டிகர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை 'டிஸ்னி லேண்ட்' (Disney Land) இளவரசர் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் விமர்சித்திருப்பது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தன்னை அனைவரும் வழிபட வேண்டும் என ராகுல் காந்தி கூறியதற்கு பதிலளித்து பேசிய தருண் சுக், அவரை இவ்வாறு விமர்சித்தார்.
மேலும், ஊழல், கலவரம் போன்ற வரலாறுகளை கொண்ட ஒரு கட்சியின் தலைவரின் வாயில் இருந்து கடவுள், வழிபாடு போன்ற வார்த்தைகள் வரக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மோடியை விமர்சித்த ராகுல்
பாரத் ஜோடோ யாத்திரை ஹரியானா மாநிலம் குருஷேத்ராவுக்கு இன்று காலை வந்தது. இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். இந்திய மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து அதன் மூலம் மோடி குளிர்காய்வதாகவும், இந்திய மக்கள் அனைவரும் தன்னை கடவுளாக நினைத்து வழிபட வேண்டும் என்ற விருப்பம் மோடிக்கு உள்ளதாகவும் ராகுல் கூறினார். மேலும், மோடியை இவ்வாறு வழிபடும் 2, 3 பேருக்குதான் இந்தியாவில் அதிக சலுகைகளும், செல்வங்களும் கிடைக்கின்றன எனவும் ராகுல் விமர்சித்திருந்தார்.

"ராகுலால் மக்களை ஏமாற்ற முடியாது"
பாரத் ஜோடோ யாத்திரை எனக் கூறிக்கொண்டு ராகுல் காந்தி ஊர் ஊராக சென்று கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். இந்து மதத்தையும், இந்து மதத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்த ஒரு கட்சியின் தலைவரை, கோயில் கோயிலாக சென்று வழிபட வைத்திருப்பது பாஜகதான். இந்து மக்கள் முன்பு போல அல்ல. அவர்கள் விழித்துவிட்டார்கள் என ராகுல் காந்திக்கு தெரிந்துவிட்டது. அதனால் பக்தனை போல வேடம் தரித்து அவர் சுற்றி வருகிறார். ஆனால், அவர்கள் (காங்கிரஸ்) யார் என்று மக்களுக்கு தெரியும். அவர்களை ராகுலால் ஏமாற்ற முடியாது.

"டிஸ்னி லேண்ட் இளவரசர்"
2024 மக்களவைத் தேர்தலில் பிரதமராக வேண்டும் என்ற பகல் கனவில் ராகுல் காந்தி மிதந்து வருகிறார். ஆனால் அது உண்மையில் பகல் கனவுதான் என்பதை அவருக்கு யாராவது புரிய வைக்க வேண்டும். 'டிஸ்னி லேண்ட் இளவரசரை' போல சிறுபிள்ளைத்தனமாக பேசி வரும் ராகுல் காந்தியை காங்கிரஸே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துமா என்பது சந்தேகம்தான்.

"புனிதமான சொல்லை ராகுல் உச்சரிக்கக் கூடாது"
மோடி தன்னை மக்கள் வழிபட வேண்டும் என விரும்புவதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார். முதலில் ராகுல் காந்தியின் வார்த்தையில் இருந்து கடவுள், வழிபாடு போன்ற புனிதமான வார்த்தைகள் வரக்கூடாது. அராஜகம், கலவரம், ஜனநாயக படுகொலை, ஊழல், குடும்ப ஆட்சி போன்ற கீழ்த்தரமான வரலாறுகளை கொண்ட ஒரு கட்சி தலைவரின் வாயில் இருந்து இதுபோன்ற புனிதமான சொற்கள் வரக்கூடாது. இவ்வாறு தருண் சுக் கூறினார்.












Click it and Unblock the Notifications