சண்டிகர் பாத்ரூம் வீடியோ லீக்.. உண்மையில் நடந்தது என்ன? சண்டிகர் பல்கலைக்கழகம் பரபர விளக்கம்
சண்டிகர்: பல்கலைக்கழக மாணவிகள் குளிக்கும் வீடியோ லீக் ஆனதாக சொல்லப்படும் விவகாரத்தில், சண்டிகர் பல்கலைக்கழகம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்து உள்ளது.
பஞ்சாப் தலைநகரில் இயங்கி வரும் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
மாணவிகள் ஹாஸ்டலில் குளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதே இந்தப் போராட்டத்திற்குக் காரணம். ஒரே நேரத்தில் பல மாணவிகள் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ லீக்
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவிகளின் வீடியோதான் லீக் ஆனதாகத் தகவல் பரவியது. முதலில் அங்குப் படிக்கும் ஆண் மாணவர்களால் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர், சக மாணவி ஒருவரே இதைச் செய்ததாகவும் அதை அந்த மாணவி ஹாஸ்டல் நிர்வாகத்திடம் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

பரவிய தகவல்
அதாவது குளியல் அறையில் கேமரா வைத்து அந்த மாணவி மற்றவர்கள் குளிக்கும் வீடியோக்களை எடுத்தாக கூறப்பட்டது. பாத் ரூம் ஒன்றில் அந்த மாணவி கேமரா வைத்தாகவும் அதில் தினமும் குளிக்கும் பெண்களின் வீடியோக்களை எடுத்ததாகவும் கூறப்பட்டது. சிறிய ரக கேமராக்கள் மூலம் ஒரு பாத்ரூமில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த அந்த மாணவி, அனைவரும் குளித்த பின்னர் கடைசியாகச் சென்று கேமாரா மறைத்து எடுத்து வந்ததாகத் தகவல் பரவியது.

போராட்டம்
அதை அந்த மாணவி சிம்லாவில் இருக்கும் ஒருவருக்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டத்தில் குதித்தனர். மேலும், குளியல் வீடியோ லீக்கானதால் அங்குப் படித்து வந்த 7 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவின. மேலும் சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் கூட தகவல்கள் வெளியானது.

கைது
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த போலீசாருக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்மந்தப்பட்ட மாணவியைக் கைது செய்து அவரது மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர்.

விளக்கம்
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சண்டிகர் பல்கலைக்கழகம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இது தொடர்பாக சண்டிகர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். ஆர்.எஸ்.பாவா கூறுகையில், "7 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டதாக வதந்திகள் பரவி வருகிறது. அது முற்றிலும் பொய். மேலும், இந்தச் சம்பவத்தில் எந்தப் பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

வதந்தி
பல்கலைக்கழகம் சார்பில் முதற்கட்ட விசாரணையில் நடத்தினோம். அதில் அந்த மாணவி தன் காதலனுடன் தனிப்பட்ட முறையில் அவரது வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதைத் தவிர வேறு எந்தவொரு மாணவியின் வீடியோவும் கண்டறியப்படவில்லை. மற்ற மாணவிகளின் குளியல் வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகப் பரவும் தகவல்கள் அனைத்தும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை" என்று அவர் தெரிவித்து உள்ளார்.

சண்டிகர்
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். மாணவிகளின் மொபைல்போன்கள் கைப்பற்றப்பட்டு போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளது. போலீசார் நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகப் பல்கலைக்கழகம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications