கொரோனாவுக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் வேண்டாம்..சூப்பர் ஸ்பிரெட்டராக மாறலாம்..பஞ்சாப் முதல்வர்
சண்டிகர்: நாட்டில் தற்போது கொரோனைா 2ஆம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் சூப்பர் ஸ்பிரெட்டராக மாறலாம் என்பதால், விவசாயிகள் போராட்டங்களை நடத்தக் கூடாது என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், இந்த விவசாய சட்டங்களுக்குப் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்,
தலைநகர் டெல்லி எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

விவசாயிகள் போராட்டம்
இந்நிலையில், பஞ்சாபில் வரும் மே 28ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதிலும் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் சொந்த தொகுதியான பட்டியலாவில் இந்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தப் போராட்டத்தை விவசாயிகள் நடத்தக் கூடாது என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய தலைவலி
ஏற்கனவே பஞ்சாபில் கொரோனா வைரசை சமாளிப்பதில் அமரிந்தர் சிங் தோல்வியடைந்துவிட்டதாகப் பரவலான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விவசாயிகள் போராட்டம் அமரிந்தர் சிங்கிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அமரிந்தர் சிங் அறிக்கை
இது குறித்து அமரிந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்டதைப் போல மோசமான பாதிப்பு ஏற்படாமல் தடுத்துள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் கொரோனா சடலங்கள் மிதந்து சென்றதையும் யாரும் மறந்துவிடவில்லை. அது பாஜகவின் மோசமான நிர்வாகத்தைக் காட்டுகிறது. ஆனால், பஞ்சாபில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற போராட்டம் கூடாது
கொரோனா பரவலைத் தடுக்க மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், விவசாயிகள் "பொறுப்பற்ற முறையில்" செயல்படக்கூடாது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இது பயனற்றதாக மாற்றிவிடும். இந்த போராட்டங்களில் கிரமங்களிலிருந்து அதிகம் பேர் கலந்துகொள்வார்கள். இதனால் கிரமங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும்
மேலும், இந்த பிரச்சினையில் பஞ்சாப் அரசு விவசாயிகளுக்கு முழு ஆதரவை அளித்துள்ளது.. எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயிகளின் இந்தப் போராட்டம் முற்றிலும் தேவையற்றது. விவசாய சட்டத்திற்கு எதிராகவே நாங்கள் உள்ளோம். நாட்டிலேயே மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் பஞ்சாப் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, கொரோனாவுக்கு எதிரான போரில் விவசாயிகள் இப்போது மாநில அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications