கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. விவசாயிகள் திட்டவட்டம்!
சண்டிகர்: விவசாயிகளின் டெல்லி நோக்கிய போராட்டம் 6வது நாளாக தொடரும் நிலையில், இன்று மத்திய அரசுடன் 4வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சாப்பில் இருந்து பிப்ரவரி 13ஆம் தேதி டெல்லி நோக்கி செல்லும் பேரணியைத் தொடங்கினர்.

இப்பேரணி பஞ்சாப் - ஹரியாணா, ஹரியாணா - டெல்லி எல்லைகளைக் கடந்து தேசியத் தலைநகரான டெல்லியை அடைய வேண்டும். விவசாயிகளின் டெல்லி சலோ பேரணியை முன்னிட்டு இணையதள சேவை, மொபைல் நெட்வொர்க் தடை செய்யப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது ஹரியாணா போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு விவசாயிகள் போலீஸாருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
இதனிடையே, விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்களுக்கு இடையேயான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை சண்டிகரில் இன்று நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8, 12 மற்றும் 16ஆம் தேதிகளில் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பல் சிங் சீமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசுடனான பேச்சு வார்த்தையை முன்னிட்டு பஞ்சாப் ஹரியாணா எல்லையில் விவசாயிகள் தங்கி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 6-வது நாளை எட்டியுள்ளது. சண்டிகரில் இன்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் விவசாயிகள் அமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடனான 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க அவசர சட்டத்தை உடண்டே இயற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications