பெருசுன்னா சும்மான்னு நினைச்சுட்டீங்களா.. பிளான் பண்ணி அசத்திய பழுத்த தலைகள்.. கலக்கிய காங்.!
ஹரியானாவில் மூத்த தலைவர்கள் காங்கிரசை வெற்றி பெற வைத்துள்ளனர்
சண்டிகர்: ஹரியானாவில் காங்கிரஸ் எப்படி திடீர் அதிசயத்தை நிகழ்த்தியது என்பதுதான் இன்று முழுவதும் டாக் ஆப் தி நேஷன். ஆனால் பழுத்த தலைவர்கள் ஒன்று கூடி சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றி சாத்தியம் என்பதை ஹரியானா காங்கிரஸ் நிரூபித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள் இந்த 3 கட்சிகள்தான் பிரதானம். இதைத் தவிர சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ்வாதி, ஜனநாயக் ஜனதா கட்சி போன்றவைகளும் உள்ளன.
காங்கிரஸின் மண் என்று சொல்லப்பட்ட ஹரியானாவை போன முறையே பாஜகவிடம் பறி கொடுத்தாயிற்று. இதனால் இந்த முறையாவது இங்கு வெல்வது என்பது காங்கிரசின் கட்டாயமாக இருந்தது. அதனால் ஒரு வலுவான கூட்டணியை அமைத்து பாஜகவை எதிர்கொள்ள வியூகம் அமைத்தது.
பகுஜன் சமாஜ்வாதி
ஆனால், எம்பி தேர்தல் தோல்வியின் காரணமாக பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமையவில்லை. அதேபோல, வரும் வருடம் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்க போவதால், ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை.
உட்கட்சி குழப்பம்
இப்படி பிரதான கட்சிகள் எல்லாமே ஆளுக்கு ஒரு திசையில் செல்ல நேரிடவும், காங்கிரஸ் கட்சி ஹரியானா மாநிலத்தில் தனித்து போட்டியிடும் சூழல் ஏற்பட்டது. காங்கிரஸின் உட்கட்சி குழப்பம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இல்லாத சூழல் பெரும் கலக்கத்தையே ஏற்படுத்தி விட்டது. ம்ஹூம்.. இந்த முறையும் காங்கிரஸ் தேறாது என்ற முணுமுணுப்புகள் எழ ஆரம்பித்தன.
சோனியா
வழக்கமாக தேர்தலின்போது வலு சேர்க்கும் சோனியாவும் பிரச்சாரமும் இந்த முறை காணாமல் போனது. இந்த சமயத்தில்தான் மூத்த 2 தலைவர்கள் களம் இறங்கினார்கள். ஒருவர் குலாம்நபி ஆசாத், இன்னொருவர் பூபிந்தர்சிங் ஹூடோ! இவர்கள் இருவருமே மிகுந்த சாமர்த்தியம் உள்ளவர்கள்.. சாதுர்யத்துடன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். சோர்ந்து, களைத்து போன காங். தொண்டர்கள் இரு பெரும் தலைவர்களின் களப்பணிக்கு பிறகு சுறுசுறுப்பானார்கள். இதில் அகமது படேல், குமாரி செல்ஜாவும் கைகோர்த்ததும் கூடுதல் வலிமை கிடைத்தது.
நடைமுறை சாத்தியம்
இதில் அதிகமாக பேசப்பட்டது இவர்களின் தேர்தல் அறிக்கைதான். ஆஹா ஓஹோ என்றெல்லாம் சாத்தியப்படாத விஷயங்களை தேர்தல் அறிக்கையில் இவர்கள் சொல்லவில்லை. இதுதான் இவர்களின் பிளஸ். "விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 33 சதவீத இட ஒதுக்கீடு, தனியார் நிறுவனங்களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, ஹரியானா அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண சலுகை என கலக்கலாக வாக்குறுதி அளித்தது பெண்களைக் கவர்ந்து விட்டது.. பெண்களைக் குறி வைத்து நிறைய சலுகைகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்திருந்தனர். இது மிகப் பெரிய சாதகமாக மாறியது.
வாக்குறுதிகள்
இதுதவிர மாணவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் நிறைய சலுகைகளை அறிவித்திருந்தனர். இதெல்லாமும்தான் காங்கிரஸுக்கு சாதகமாக மாறியது. அதாவது நடைமுறை சாத்தியங்கள் நிறைந்த வாக்குறுதிகளையே அளித்தனர். இது போலித்தனம் ஏமாற்றம் இல்லாத வாக்குறுதிகளாக ஹரியானா மக்களால் பார்க்கப்பட்டது. இதுதான் மக்களின் மனசில் போய் ஒட்டிக் கொண்டது.
2-வது இடம்
ஹரியானாவில் காங்கிரஸ் படு தோல்வி அடையும். 10 சீட் கூட தேறாது என்றுதான் பலரும் சொல்லி வந்தனர். ஆனால் அதை பொய்ப்பித்து விட்டது ஹரியானா காங்கிரஸ். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கணிப்புகளை தவிடுபொடியாக்கி உள்ளது. பாஜக ஒருபக்கம், இன்னொரு பக்கம் ஓம் பிரகாஷ் செளதாலாவின் பேரன். இதைக் கடந்துதான் இன்று காங்கிரஸ் 2வது இடத்தை வலுவாக பெற்றுள்ளது.
நல்ல ரிசல்ட்
இப்போது, ஹரியானாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போய் விட்டது. அதை விட முக்கியமாக காங்கிரஸும் இப்போது ஆட்சியமைக்கும் வாய்ப்புகளில் உள்ளது என்பதுதான் முக்கியமானது. சீனியர்கள் இணைந்து கை கோர்த்து திட்டமிட்டால் அது நிச்சயம் நல்ல ரிசல்ட்டைத் தரும் என்பதை ஹரியானா காங்கிரஸ் கட்சி நிரூபித்துள்ளது என்று தாராளமாக சொல்லலாம்.