மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை.. தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு.. ஹரியானா அரசின் அதிரடி சட்டம்
சண்டிகர்: தனியார் துறையில் மண்ணின் மைந்தர்களுக்கு 75% இட ஒதுக்கீட்டை வழங்கும் புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் 2019ஆம் ஆண்டு தேர்தல் எதிர்கொண்ட கட்சி ஜன்னாயக் ஜந்தா கட்சி. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானாவில் 10 இடங்களை ஜன்னாயக் ஜந்தா கட்சி கைப்பற்றியது.
அதன் பின்னர் பாஜக தலைமையிலான அரசுக்கு ஜன்னாயக் ஜந்தா கட்சி ஆதரவு அளித்தது. அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதலா, ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.
இந்நிலையில், தற்போது தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீட்டை வழங்கும் புதிய சட்டத்திற்கு ஹரியானா மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக துஷ்யந்த் சவுதலா தெரிவித்துள்ளார். இது மாநிலத்திலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் இனி அனைத்து தனியார் நிறுவனங்களிலும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சட்டத்தின்படி, ஒரு தனியார் நிறுவனத்தில் 50,000 ரூபாய் கீழ் ஊதியம் பெறும் வேலைகளில் 75%, உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும். இச்சட்டம் அமலுக்கு வந்த மூன்று மாதங்களுக்குள், இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஏற்ற நபர்கள் மாநிலத்தில் கிடைக்கவில்லை என்றால் அந்தச் சமயத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சட்டத்திற்குக் கடந்தாண்டு ஹரியானா அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.