கபில்தேவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ்.. என்ன நடந்தது?
சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் முதலாக உலககோப்பையை பெற்று தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல சென்றேன் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்ட்டராக ஜொலித்தவர் யுவராஜ் சிங். 2008 ல் டி20 உலககோப்பை, 2011ல் 50 ஓவர் உலககோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தார். அதோடு இரு தொடரிலும் யுவராஜ் சிங் சிறப்பாக ஆடினார். இந்திய அணி உலககோப்பையை வெல்ல யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார்.

யுவராஜ் சிங்கின் தந்தை பெயர் யோக்ராஜ் சிங். இவரும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி உள்ளார். ஒரு டெஸ்ட் போட்டி, 6 ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். தந்தையின் வழியில் கிரிக்கெட்டை பேஷனாக எடுத்து விளையாடி இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் யுவராஜ் சிங்.
இந்நிலையில் தான் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், நம் நாட்டுக்கு முதல் முறையாக 1983ம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்று தந்த கபில்தேவை துப்பாக்கி எடுத்து சுட்டு கொல்ல முயன்றதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக Samdish Bhatia-வின் இண்டர்வியூவில் யோக்ராஜ் சிங் இதுபற்றி தகவலை பகிர்ந்துள்ளார். யோக்ராஜ் சிங் கூறியதாவது:
கபில்தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அதேபோல் நார்த் ஜோன், ஹரியானா கேப்டனாகவும் இருந்தார். எந்த வித காரணமும் இன்றி அணியில் இருந்து என்னை நீக்கினார். இதுபற்றி என் மனைவி (யுவராஜ் சிங்கின் தாய்) கபில்தேவிடம் கேள்விகள் கேட்கும்படி கூறினார். அதற்கு நான் கபில்தேவுக்கு பாடம் கற்பிப்பேன் என்று கூறினேன்.
என் துப்பாக்கியை எடுத்து கொண்டு செக்டார் 9 என்ற பகுதியில் உள்ள கபில்தேவ் வீட்டுக்கு சென்றேன். அப்போது கபில்தேவ் அவரது தாயாருடன் வெளியே வந்தார். அவரை பார்த்ததும் நான் திட்டி தீர்த்தேன். உன்னால் ஒரு நண்பரை இழந்துவிட்டேன். நீ இப்படி செய்தற்கு உரிய விலையை கொடுப்பாய் என்று ஆக்ரோஷமாக கூறினேன்.
அதோடு உன்னை துப்பாக்கியால் சுட்டு கொல்ல வந்தேன். உன் நெற்றியில் சுடுவதற்காக துப்பாக்கியை எடுத்து வந்தேன். ஆனால் உனக்கு பக்திமிக்க தாய் இருக்கிறார். இதனால் சுடவில்லை என்று கூறி திரும்பி வந்தேன். அதோடு அந்த தருணத்தில் நான் ஒரு முடிவை எடுத்தேன். இனி கிரிக்கெட் விளையாடக்கூடாது என்பது தான் அந்த முடிவு. அதன்பிறகு தான் என் மகனை கிரிக்கெட்டில் தடம் பதிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
கபில்தேவ் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோர் எனக்கு எதிராக செயல்பட்டனர். நான் ஒருபோதும் பிஷன் சிங் பேடியை மன்னிக்கவில்லை. அவர் படுக்கையிலேயே இறந்துவிட்டார். நான் அணியில் இருந்து நீக்கப்பட்போது அணி தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த ரவீந்திர சதாவை தொடர்பு கொண்டு கேட்டேன். அப்போது பிஷன் சிங் பேடி (தேர்வுக்குழு தலைவர்) என்னை தேர்வு செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் நான் சுனில் கவாஸ்கரின் ஆள் என்று கூறினார்.
அவர் இப்படி கூற முக்கிய காரணம் நான் மும்பையில் கிரிக்கெட் ஆடியது தான். உண்மையில் நான் சுனில் கவாஸ்கருடன் நெருக்கமாக இருந்தேன். அதன்பிறகு 2011ம் ஆண்டில் இந்தியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலககோப்பையை வென்றது. அந்த சமயத்தில் ஒரெயாரு நபர் கண்ணீர் வடித்தார் என்றால் அது கபில்தேவ் தான். அப்போது நான் கபில்தேவுக்கு நாளிதழ் செய்தியை கட் செய்து அனுப்பினேன். அதனுடன் உலககோப்பை போட்டியில் எனது மகன் உன்னை விட சிறப்பாக விளையாடினார் என்று கூறியிருந்தேன்'' என்று கூறினார்.
அதாவது கபில்தேவ் கேப்டனாக இருந்த நார்த் ஜோன் அணியில் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் விளையாடினார் அப்போது கபில்தேவ் மற்றும் தேர்வுக்குழு தலைவராக இருந்தார் பிஷன் சிங் பேடி ஆகியோர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அணியில் இருந்து நீக்கி உள்ளனர். இதனால் தான் அவர் கோபமாகி கபில்தேவை சுட்டு கொல்ல முயன்றார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications