"சண்டிகரை உடனே எங்களுக்கு கொடுங்கள்!" முஷ்டியை முறுக்கும் பகவத் மான்! ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
சண்டிகர்: பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்று சில வாரங்கள் மட்டுமே நிறைவடையும் நிலையில், மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் முக்கிய தீர்மானம் ஒன்றைப் பஞ்சாப் சட்டசபை நிறைவேற்றி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 92 இடங்களைக் கைப்பற்றியது.
டெல்லிக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். இதையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார்.

பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்று சில வாரங்கள் மட்டுமே நிறைவடையும் நிலையில், மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் முக்கிய தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்துள்ளார். பஞ்சாப் சட்டசபையில் மக்களின் உணர்வுகளை மதிக்கவும், நல்லிணக்கத்தைப் பேணும் வகையிலும் சண்டிகரை உடனடியாக பஞ்சாபிற்கு மாற்றுவது குறித்த அதிகாரப்பூர்வ தீர்மானத்தை அம்மாநில முதல்வர் பகவந்த் மான் சட்டசபையில் முன்மொழிந்தார்.

தீர்மானம்
ஒரு மாநிலம் முன்பு பிரிக்கப்பட்ட போது எப்போதும், தலைநகர் என்பது எப்போதும் தாய் மாநிலத்திலேயே இருக்கும் என்று தீர்மானம் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், "நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், சண்டிகரை உடனடியாக பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்ற மத்திய அரசிடம் கோரிக்கையை எழுப்புகிறோம். சண்டிகர் நகரம் பஞ்சாபின் தலைநகராக உருவாக்கப்பட்டது.

சண்டிகர்
கடந்த காலங்களில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது எல்லாம், தலைநகரம் தாய் மாநிலத்திலேயே இருக்கும். எனவே, சண்டிகரை முழுமையாகப் பஞ்சாபிற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். பாரம்பரியமாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த அதிகாரிகளால் நிரப்பப்பட்ட பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர்களின் பதவிகளை மத்திய அரசு இந்த முறை அப்படி நிரப்பவில்லை.

எதிரானது
அதேபோல், சண்டிகர் நிர்வாகம் எப்போதும் 60:40 என்ற விகிதத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், சமீபத்தில் மத்திய அரசு சண்டிகருக்கு வெளி அதிகாரிகளை அதிகளவில் நியமித்தது. அதாவது மத்திய அரசு சண்டிகர் நிர்வாகத்தின் ஊழியர்களுக்கு மத்திய சிவில் சேவை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த கால புரிந்துணர்வுக்கு முற்றிலும் எதிரானது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்போது இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிருப்தி
கடந்த 1966ஆம் ஆண்டு இந்தி பேசும் பகுதிகளை உள்ளடக்கிய பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானா பிரிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கூட்டுத் தலைநகராக சண்டிகர் செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தான் சண்டிகரை உடனடியாக பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசிடம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வலியுறுத்தி உள்ளார். முதல்வராகப் பதவியேற்ற சில வாரங்களிலேயே மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையிலான தீர்மானத்தை பகவந்த் மான் கொண்டு வந்துள்ளார். இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுடன் மோதலை ஆரம்பித்துள்ளார் பவகத் மான்.












Click it and Unblock the Notifications