அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் 78 பேர் கைது! நீடிக்கும் பதற்றம்.. பஞ்சாபின் தற்போதைய சூழல் இதுதான்
காலிஸ்தான் அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கிற்கு நெருக்கமான 78 பேரை கைது செய்தது காவல்துறை
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினை பேசி வந்த காலிஸ்தான் தலைவர் 'அம்ரித்பால் சிங்கை' கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
நாடு முழுவதும் இன ரீதியிலான பிரிவினை வாதத்திற்கு சுதந்திர இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது. ஆயினும் சில குறிப்பிட்ட இன குழுக்கள் தனி நாடு கோரிக்கை தொடர்பான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் இந்த போராட்டம் கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில், இந்த போராட்டத்தை ஒடுக்க அம்மாநில காவல்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 'வாரிஸ் பஞ்சாப் டி' எனும் அமைப்புதான் இந்த பிரிவினை கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகிறது.
எனவே இதன் தலைவரான 'அம்ரித்பால் சிங்' மீது காவல்துறையினர் தங்களது பிடியை இறுக்கினர். இப்படி இருக்கையில் சில நாட்களுக்கு முன்னர் அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் ஒருவரை காவல்துறையினர் கடத்தல் வழக்கில் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு 'வாரிஸ் பஞ்சாப் டி' கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் எனவும் கூறியிருந்தது.

கலவரம்
ஆனால் காவல்துறையினர் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பு எச்சரித்தைப்போலவே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் பலர் துப்பாக்கி, வாள் என பயங்கர ஆயுதங்களுடன் அஜ்னாலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை விடுவிப்பதாக காவல்துறையினர் அறிவித்தனர். இச்சம்பவம் பஞ்சாப் காவல்துறை வரலாற்றில் ஒரு கறுப்பு புள்ளியாக அமைந்துவிட்டது. அதேபோல மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் குற்றம்சாட்ட தொடங்கினர்.

பிரச்னை
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஒருபுறம், எதிர்க்கட்சிகளின் அரசியல் அழுத்தம் மறுபுறம் என இருக்கையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இதற்கான தீர்வு குறித்து விவாதித்தார் அம்மாநில முதலமைச்சர் பகவந்த்மான். இதன் பின்னர்தான் 7 மாவட்டங்களின் காவல்துறையினர் ஒன்று சேர்ந்து காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்குக்கு ஸ்கெட்ச் போட்டனர். இந்நடவடிக்கைக்காக நேற்று மதியம் 12 மணி முதல் மாநிலம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 24 மணி நேரம் வரை இன்டர்நெட் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேடுதல் வேட்டை
இதனையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பில் தீவிரமாக இயங்கி வந்த அதன் செயற்பாட்டாளர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க துணை ராணுவப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து முக்கிய நபராக அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் நெருங்கியபோது அவர் பைக்கில் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றிருக்கிறார். அவரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஆதரவு
அதேபோல கைது செய்யப்பட்டவர்களிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உள்ளூர் மக்கள் கூறுகையில், "வெளிநாடுகளில் வேலை பார்க்கும் சிலர் காலிஸ்தான் கருத்தியலை பலமாக பரப்பி வருகின்றனர். அங்கிருந்து இந்த இயக்கங்களுக்கும் பொருளாதார உதவி கிடைக்கிறது. எனவே இந்த நம்பிக்கையில்தான் இவர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications