முஸ்லிம்களின் கடைகளா.. அடிச்சு நொறுக்கு! அரியானாவில் அராஜகத்தின் உச்சம்.. கொள்ளையடிக்கப்பட்ட பணம்
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக இரு பிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பானிபட் பகுதியில் இஸ்லாமியர்களின் கடைகள் அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலத்தின் நுஹ் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறை மேவாட், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பானிபட் பகுதியில் வன்முறை வெடித்து உள்ளது. இஸ்லாமியர்களின் கடைகளை தேர்வு செய்து கலவர கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா பகுதியை சேர்ந்த இர்ஷாத் என்ற நபர் அப்பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்துள்ளார். அது தாக்கப்பட்டு உள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நார் பகுதியை சேர்ந்த ஷாநவாஸ் என்பவரது சலூன் கடையும் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும், பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்கள்.
இதுகுறித்து தகவலறிந்த பானிபட் காவல் கண்காணிப்பாளர் அஜித் சிங் செகாவத், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் புகார்களை பெற்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் போலீசாரிடம் தெரிவித்தபோது, 20 முதல் 25 முகமூடி அணிந்த இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பைக்குகளில் வந்ததாகவும், முஸ்லிம்களின் கடைகளை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளனர்.
நடைபாதை வியாபாரிகளை தாக்கிய அந்த கும்பல், காஸ்மெட்டிக் கடையின் கண்ணாடியையும் உடைத்து சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் முகமூடி அணிந்த இளைஞர்களை கொண்ட கும்பல் கடைகள் மீது தாக்குதல் நடத்துவது பதிவாகி உள்ளது.
கடந்த 2 நாட்களில் நடைபெறும் 2 வது சம்பவம் இதுவாகும். இந்த நிலையில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸ் படைகளை குவிக்க காவல் துறை முடிவு செய்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் புகாரை தொடர்ந்து 3 முதல் தகவல் அறிக்கைகளை போலீசார் பதிவு செய்து உள்ளார்கள். குற்றவாளிகளை அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குற்றம்சாட்டப்பட்ட அடையாளம் தெரியாத 25 பேர் மீது ஐபிசி 148, 149, 188, 323, 379 B, 427 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அப்பகுதி மக்களின் உதவியுடன் போலீசார் பாதுகாப்பு பணியை தொடர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications