பல்கலைக்கழக குளியல் வீடியோ லீக் விவகாரம்! பிளாக் மெயில் செய்த ராணுவ வீரர்! எல்லையில் வைத்து கைது
சண்டிகர்: பஞ்சாப் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் குளியல் வீடியோ லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முக்கிய திருப்பம் அரங்கேறி உள்ளது.
பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை திடீரென மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கில் மாணவிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இணையத்தில் சில மாணவிகள் குளிக்கும் வீடியோ லீக் ஆனதே மாணவிகள் போராட்டத்தில் குதிக்கக் காரணமாக அமைந்தது. முதலில் இந்த கேவலமான செயலை யார் செய்து இருப்பார்கள் என தெரியவில்லை.
சண்டிகர் பாத்ரூம் வீடியோ லீக்.. உண்மையில் நடந்தது என்ன? சண்டிகர் பல்கலைக்கழகம் பரபர விளக்கம்
குளியல் வீடியோ
பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அங்கு ஹாஸ்டலில் இருக்கும் சக மாணவி ஒருவரே இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. தினமும் ஒரு பாத்ரூமில் மறைவாக கேமராவை வைத்து மற்ற மாணவிகள் குளிப்பதை அந்த பெண் படம் பிடித்துள்ளார். அனைத்து மாணவிகளும் குளித்த பின்னர், பாத்ரூம் சென்று மறைத்து எடுத்து வந்துள்ளார்.
விசாரணை
பல நாட்களாக இந்தச் சம்பவத்தில் அந்த மாணவி ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 60 மாணவிகள் குளிக்கும் வீடியோவை இப்படி அவர் வீடியோ எடுத்து உள்ளார். இதை அந்த மாணவி சிம்லாவில் உள்ள காதலனுக்கு அனுப்பியதாகவும் தகவல் பரவியது. இதுவே மாணவிகள் போராட்டத்தில் குதிக்கக் காரணமாக அமைந்தது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டார். இதற்காக 3 பெண்களைக் கொண்ட தனி டீம் அமைக்கப்பட்டு உள்ளது.
பிளாக்மெயில்
மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியான நிலையில், அதைப் பல்கலைக்கழக நிர்வாகம் முற்றிலுமாக மறுத்தது. முதலில் அந்த மாணவி தனது வீடியோவை மட்டுமே தனது காதலனுக்குப் பகிர்ந்ததாகவும் மற்ற மாணவிகள் வீடியோ எதுவும் இல்லை என்றும் சொல்லப்பட்டது. இருப்பினும், பின்னர் அந்த மாணவி மற்றவர்கள் குளிப்பதை எடுக்க பிளாக் மெயில் செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
திருப்பம்
இந்த விவகாரத்தில் வீடியோ எடுத்த மாணவி, அவரது காதலன் என சொல்லப்படும் சிம்லாவை இளைஞன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில் சண்டிகர் பல்கலைக்கழக விவகாரத்தில் திடீர் திருப்பம் அரங்கேறி உள்ளது. இதனிடையே மாணவியை பிளாக் மெயில் செய்த விவகாரத்தில் ராணுவ வீரர் ஒருவரைப் பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராணுவ வீரர்
அருணாச்சல பிரதேச எல்லையில் வைத்து அந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு உள்ளார். இத்தகவலைப் பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் உறுதி செய்துள்ளார். மொகாலியில் இருந்து சென்ற போலீஸ் டீம், ராணுவ வீரர் சஞ்சீவ் சிங்கைக் கைது செய்துள்ளனர். தடயவியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைக் கண்காணித்த பின்னர், சஞ்சீவ் சிங் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கௌரவ் யாதவ் தெரிவித்து உள்ளார்.
எல்லையில் வைத்து
அருணாச்சல பிரதேசத்தில் எல்லையில் உள்ள சேலா பாஸில் இருந்து ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ராணுவம் தவிர உள்ளூர் போலீசார் மற்றும் அசாம் போலீசார் உதவியுடன் இந்த நடவடிக்கையைப் பஞ்சாப் போலீசார் எடுத்துள்ளனர். அந்த ராணுவ வீரரைப் பஞ்சாப் அழைத்து வரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. விரைவில் அவர் மொகாலியில் உள்ள மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பரபரப்பு
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்றும் பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் தெரிவித்து உள்ளார். மாணவிகள் போராட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.