108.. கலைஞர் சாமர்த்தியமா செஞ்சிட்டாரே.. திமுகவுக்கு பயம்.. அதிமுக பதறுது.. கொதிக்கும் பாமக திலகபாமா
பாமகவுக்கான 10.5 இடஒதுக்கீடு குறித்து திலகபாமா ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்
சென்னை: வன்னியர்களுக்கான 10.5 இடஒதுக்கீடு விஷயத்தில் தென்மண்டல மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, யாருடைய இடத்தையும் பாமக பறித்து கொள்ளவில்லை என்று திலகபாமா கருத்து தெரிவித்துள்ளார். உண்மையிலேயே இந்த இடஒதுக்கீட்டில் தென்மண்டல மக்களுக்கு பாதிப்பு என்பதே கிடையாதே.. முதலில் இடஒதுக்கீடு என்று சொல்லாதீர்கள்.. இடப்பங்கீடு என்பதே சரி என்றும் திலகபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாமக மாநில பொருளாளரும், கவிஞருமான திலகபாமா ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அப்போது அவரிடம் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.
மேலும், பாமகவால்தான் அதிமுகவில் பிரச்சனை வெடித்ததாக ஓபிஎஸ் சொல்கிறாரே, அதை பற்றி உங்கள் கருத்து என்ன என்றும் மற்றொரு கேள்வியாக திலகபாமாவிடம் கேட்டோம்.

பிரிவினைவாதம்
அதற்கு திலகபாமா நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை: சாதி உணர்வு ஊட்டப்படுவது என்பதையே தவறான விஷயமாக நான் பார்க்கிறேன்.. சாதி உணர்வு எந்த காலத்திலும் பாமக பிரிவினைவாதமாக ஊட்டியது கிடையாது.. எல்லா காலகட்டத்திலும் அமைப்பு ரீதியான, தமிழ் சமுதாயம் என்ற வார்த்தைகளுடன் அதை ஐயா உருவாக்கி வருகிறார்.. தொண்டர்களும் அப்படித்தான் பழகி வருகிறார்கள்.. ஆனால், இந்த சாதீய உணர்வை ஊட்டுபவர்கள் யார் என்றால், அதை சொல்பவர்கள்தான் மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.. வெளிப்படையாக பேசும் பாமகவிடம் சாதி உணர்வை ஊட்டக்கூடிய விஷயம் இல்லை..

கயிறு வேணுமே
சொந்த சமுதாயத்தை பெருமைப்படுத்துவது தவறிலல.. ஆனால் அடுத்த சமுதாயத்தை சிறுமைப்படுத்துவதுதான் தவறு.. சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்களுக்காக பேசுவது மட்டுமே சமூக நீதி கிடையாது.. வன்னியர் சமூகம், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கி உள்ளது.. இதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.. ஆனால், படித்த இளைஞர்கள் பிடித்து கொள்வதற்கு ஒரு கயிறாவது வேணும்தானே.. ஆகாசத்தில் கோட்டை கட்ட முடியுமா? அவனிடம் உள்ளதை சொல்லிதான் அவனை மேலே கொண்டு வர முடியும்.. கல்வி படித்தவனுக்கு வாய்ப்பு என்பதுதான் இங்கு இல்லாமல் போகிறதே.. அதைகூட இந்த அரசியல் இயக்கங்கள் தருவதற்கு தயாராக கிடையாது.. இன்னைக்கு திமுக தருவதற்கு தயாராக இருக்கிறதா?

பலி 21
10.5 சதவிதம் விவகாரத்தில் டேட்டாக்களை எடுத்து தருவதற்கு திமுக அரசு தயாராக இல்லை.. காரணம், இது மட்டும் நடந்துவிட்டால், பாமக வெற்றி பெற்றதாகிவிடும், ஐயா வெற்றி பெற்றதாகிவிடுவார் என்ற பயம்தான்.. 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டால்தான், அதிமுகவுக்குள் வெடித்தது என்கிறார்கள்.. வடதமிழ்நாடின் வெற்றிக்காக எங்களை பலிகொடுத்துவிட்டார்கள் என்று ஓபிஎஸ் தரப்பினர் சொல்கிறார்கள்.. ராமதாசுக்காக எங்களை பலி கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.. ஆனால் உண்மையிலேயே இந்த இடஒதுக்கீட்டில் தென்மண்டல மக்களுக்கும் என்ன சம்மந்தம்? இதனால் அவர்களுக்கு பாதிப்பு என்பதே கிடையாதே.. முதலில் இடஒதுக்கீடு என்று சொல்லாதீர்கள்.. இடப்பங்கீடு என்பதே சரி.

கலைஞர் சாமர்த்தியம்
மொத்தம் வன்னியர்கள் மக்கள் தொகை 20 சதவீதம் இருப்பதாக கணக்கு சொல்கிறது.. ஆனால், இந்த கணக்கீடு உறுதி செய்யப்படவிலலை.. அதனால்தான் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.. இந்த கணக்கெடுப்பை நடத்த ஆணையம் போட்டும் அதையும் கலைத்துவிட்டார்கள். திமுக அதற்கு தயாராக இல்லை.. அதனால்தான், 20 சதவீதம் இருக்கிறோம், அதனால் 20 சதவீதம் கேட்டு போராட வேண்டியதாயிற்று.. உடனே கலைஞர், அதை கொடுப்பதாக சொன்னார்.. வன்னியர்கள் மட்டுமல்லாமல், 108 மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், சாமர்த்தியமாக இணைத்துவிட்டார்.. ஆனால், போராடியது என்னவோ பாமகதான்.. அதற்காக 21 பேரை இழந்தது பாமகதான்.. 108 சாதிகளுக்கான வாய்ப்பு உருவாக்கியது ஐயா ராமதாஸ்தான்.. இதற்காக யாராவது ஐயாவை பாராட்டினார்களா? கிடையாது.

பறிக்கல
வன்னியர்கள் அந்த இடஒதுக்கீடு பெற்று தந்தும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பாமக ஏகப்பட்ட புள்ளி விவரங்கள் தரவுகளாக தருகிறது.. அதற்கு பிறகுதான், 10.5 ஒதுக்கீடு தரலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். உடனே, தென்மண்டலத்தில் எதிர்ப்பு எழுகிறது.. நான் தென்பகுதி மக்களுக்கு குறிப்பாக, தேவர் இன மக்களுக்கு, சொல்லிக் கொள்வது என்னவென்றால், யாருடைய இடத்தையும் பாமக பறித்து கொள்ளவில்லை.. இட பங்கீட்டைதான் கேட்கிறோமே தவிர, தென்மண்டல மக்களின் வாய்ப்பை எடுத்து கொள்ளவில்லை" என்றார் திலகபாமா.












Click it and Unblock the Notifications