60 கி.மீ வேகத்தில் வீசப்போகிறது சூறாவளி.. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை கொட்டும்.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், கரூர், மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளை முதல்.. பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க ஊரடங்கு கிடையாது.. எடியூரப்பா அதிரடி
60 கி.மீ வேகத்தில் காற்று வீசும்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னகல்லார், மடத்துக்குளத்தில் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று தொடங்கி 23-ம் தேதி வரை மாலத் தீவு கச்சத் தீவுப் பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு மையம்
காற்று பலமாக இருப்பதால், நாளை முதல் கேரள கடலோர பகுதிகள் மத்திய கிழக்கு கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கும்பக்கரை அருவி
இதனிடையே, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கோடை மழை முற்றிலும் பெய்யாது போனது. தென் மேற்கு பருவ மழை துவங்கியது முதல் போதிய மழை இல்லாது போனதால் அருவிக்கு வரும் நீர்வரத்து இன்றி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த நில நாட்களாக அவ்வப்பொழுது கும்பக்கரைக்கு மேல் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக பெய்த சாரல் மழையால் நீர் வரத்து துவங்கியுள்ளது.
கொடைக்கானல் மழை
நேற்று மாலை முதல் இரவு வரையில் கொடைக்கானல், வட்டகானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கன மழையால் அருவியில் நீர் வரத்து சற்று அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிக்கு கீழ் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து துவங்கி குளங்களில் நீர் நிறைந்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.