விளைநிலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதா?… உடனே மூட ஐகோர்ட் உத்தரவு
சென்னை: திட்ட அனுமதியில்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கடைகளை உடனடியாக அகற்றிட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரியும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை? என விளக்கமளிக்க கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்துவதை தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஏன் சிசிடிவி கேமிராக்களை பொருத்தக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் செயல்படும் 3,000 டாஸ்மாக் கடைகளில் தற்போது சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள கடைகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என கூறிய நீதிபதிகள், 110 டாஸ்மாக் கடைகளை மூடியதற்கான அறிக்கையை 18ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications