பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு.. எப்படி பார்க்கலாம் தெரியுமா? இணையதளங்களில் லிஸ்ட் இதோ!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரலில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்து. இந்நிலையில் தான் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் எப்படி பார்ப்பது? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் நடந்தது. ஏப்ரல் 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முழுமையாக முடிவடைந்தன.

மொத்தம் 3,324 மையங்களில் மாண-மாணவிகள் தேர்வுகள் எழுதினர். 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர்.
அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் சுமார் 48,000க்கும் அதிகமானவர்கள் பிளஸ் 2 பொதுதேர்வை எழுதாமல் இருந்தனர். இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை மாநிலம் முழுவதும் நடந்தது. இதில் சுமார் 50,000 முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றும் பணி தொடங்கி நிறைவு பெற்றது.
இதன் தொடர்ச்சியாக தான் மே மாதம் 5ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு நடைபெற உள்ளதை கருத்தில் தேர்வு முடிவுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி மே மாதம் 8 ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
அதன்படி நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாக உள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட உள்ளார். இதையடுத்து மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளி மற்றும் இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.
அதாவது மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை நாளை அறிந்து கொள்ளலாம். இதுதவிர கலெக்டர் அலுவலகத்தின் என்ஐசி எனும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுமட்டுமின்றி பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்களுக்கும் காலை 9.30 மணிக்கு மேல் மெசேஜாக அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
****












Click it and Unblock the Notifications