அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட்.. சபாநாயகர் உத்தரவை அடுத்து உடனே வெளியேறிய எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று அமளியில் ஈடுபட்ட 13 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். 'டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதை பற்றி விவாதிக்க முடியாது. ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியபோது பேச அனுமதிக்கவில்லை எனக் கூறினார்.

ஒரு நாள் சஸ்பெண்ட்
இதையடுத்து, சட்டசபை கூட்டம் நடக்கும்போது, முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தும் பதாகையை காட்டியதால், அவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
பின்னர் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு பிரச்னையை கிளப்பி, அதற்கு பிறகு விவாதங்கள் நடைபெற்று, சபாநாயகர் ஒரு விளக்கம் தந்து, திருப்தி அடையாமல் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.
ஸ்டாலின் பதில்
அதே நேரத்தில் நான் சொல்ல விரும்புவது, கையில் பதாகையை ஏந்தி இருந்தார்கள். அதில் 'அந்த தியாகி யார்... அந்த தியாகி யார்..? என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் தாங்கள் சிக்கி இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்து கொள்வதற்காக யாருடைய காலில் போய் விழுந்தார்?
நொந்து போய் நூடுல்ஸ் ஆக இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் தான் தியாகிகளாக இருக்கிறார்கள். முதல்வர் பதவி வாங்குவதற்காக யாருடைய காலில் போய் விழுந்து, அந்த அம்மையாரை ஏமாற்றியவர் தான் இன்று தியாகி ஆக இருக்கிறார். தியாகிகள் என்று எழுதி பதாகைகளை கொண்டு வந்ததால், நான் இந்த விளக்கத்தை தருகிறேன்" எனக் கூறினார்.
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்
அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், மதுபான ஆலைகளிலும் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மூன்று நாட்களுக்கு மேலாக இரவு பகலாக நடைபெற்ற இந்த அமலாக்கத்துறை சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 'அந்த தியாகி யார்' என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த நிலையில் வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் 'அந்த தியாகி யார்' என்ற வாசகம் பொறித்த கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
இதனிடையே சட்டபேரவையில் டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முயன்ற நிலையில், அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்காததால் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இசக்கி சுப்பையா உள்ளிட்ட 13 அதிமுக உறுப்பினர்கள் பதாகைகளை தூக்கிக் காட்டினர்.
சபாநாயர் அப்பாவு உத்தரவு
இதனையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்கு ஆதரவாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, "அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 28 ஆம் தேதி வெளியேற்றப்பட்டனர். இன்று பதாகை ஏந்தி வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டு இருப்பதன் காரணமாக கூட்ட தொடர் முழுவதும் கலந்து கொள்ள முடியாது" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இன்று ஒரு நாள் மட்டும் பதாகை ஏந்தி வந்த அவர்களை சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாது என்று மட்டும் அறிவிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் அப்பாவு, "முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று இன்று ஒரு நாள் மட்டும் பாதகை ஏந்தி வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர் சபை நடவடிக்கையில் கலந்து கொள்ள முடியாது. மற்றவர்கள் பேட்ஜ்ஜை கழற்றினால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் லிஸ்ட்:
1.அக்ரி கிருஷ்ணமூர்த்தி
2.அசோக் குமார்
3.சம்பத்குமார்
4.அம்மன் கே அர்ஜுனன்
5.பொன் ஜெயசீலன்
6.இசக்கி சுப்பையா
7.செந்தில்குமார்
8.செந்தில்குமார்
9 சித்ரா
10.ஜெயக்குமார்
11.பாலசுப்ரமணியன்
12.நல்லதம்பி
13.மரகதம் குமரவேல்












Click it and Unblock the Notifications