மாண்டஸ் கோரத்தாண்டவம்! கடலில் மூழ்கிய விசைப்படகுகள்.. கவலையில் காசிமேடு மீனவர்கள்! 150 படகுகள் சேதம்
சென்னை: மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 150 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. 3 படகுகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை சென்னையை ஒட்டி கரையை கடந்த நிலையில், சுமார் 65-85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது.
இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் சில இடங்களில் விழுந்ததால் மின்சார சேவை சில இடங்களில் துண்டிக்கப்பட்டது.
சூறையாடிய மாண்டஸ்.. முறிந்து விழுந்த மின்கம்பங்கள்..மின்விநியோகம் எப்போது? அமைச்சர் சொன்னது இதுதான்
சேதம்
12 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல் தனது வழியில் உள்ள அனைத்தையும் துக்கியெறிந்துவிட்டு சென்றுள்ளது. இந்த பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி சார்பில், 272 மர அறுவை இயந்திரங்களும், 6 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்களுடன் நூற்றுக்கணக்கான மாநகராட்சி ஊழியர்கள் இரவு முழுவதும் பணியில் இருந்துள்ளனர். மட்டுமல்லாது, இவர்களை ஒருங்கிணைக்க மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோரும் பணியாளர்களுடன் இரவு முழுவதும் இருந்துள்ளனர். ஆங்காங்கே வீழந்த மரங்களை பணியாளர்கள் உடனடியாக அகற்றியுள்ளனர். அதேபோல மின் கம்பங்களும் சில இடங்களில் விழுந்ததால் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மற்றபடி நகரின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.
வேதனை
நள்ளிரவு தொடங்கி அதிகாலை 4 மணி வரை புயல் மாமல்லபுரத்தை ஒட்டிய பகுதியில் கரையை கடந்துள்ளது. தற்போது வரை சுமார் 300 மரங்கள் விழுந்துள்ளன. அதேபோல கோவளம் மற்றும் காசிமேட்டில் நிற்க வைக்கப்பட்டிருந்த படகுகளும் பலத்த சேதமடைந்துள்ளன. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை பொறுத்த அளவில் சுமார் 150 விசை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைந்துள்ளன. அதேபோல மூன்று படகுகள் முற்றிலுமாக சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளன. இதன் காணரமாக மீனவர்கள் வேதனையடைந்துள்ளனர். விசை படகுகளை பொறுத்த அளவில் ரூ.50 லட்சத்திற்கு கீழ் படகுகளை கட்ட முடியாது என்றும் தற்போது சேதமடைந்துள்ள 150 விசைப்படகுகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.75 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை மதிப்பு உள்ளவை என்று மீனவர்கள் கூறியுள்ளனர்.
கடன் தொகை
சேதமடைந்த படகுகளை மறு கட்டமைப்பு செய்யவும், மூழ்கிய படகுகளுக்கு முழுமையாகவும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மட்டுமல்லாது, கடன் பெற்று கட்டப்பட்ட படகுகள் சேதமடைந்திருப்பின் அல்லது மூழ்கி இருப்பின் அதற்கான கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் படகு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், "காசிமேடு பகுதியில் மொத்தம் ஆறு பாலங்கள் இருக்கிறது. இந்த பாலங்களில்தான் படகுகளை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் பலத்த காற்று காரணமாக படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. அதேபோல இந்த பாலங்களிலும் மோதுவதால் படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன" என்று மீனவர்கள் கூறியுள்ளனர்.
உதவி
காசிமேடு மட்டுமல்லாது கோவளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக படகுகளும் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கூறியுள்ளனர். சென்னையை தவிர்த்து ராமேஸ்வரம், பூம்புகார் துறைமுகம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளும் சேதமடைந்துள்ளன. இந்த படகுகளை சரி செய்து மீண்டும் கடலுக்குள் செல்ல குறிப்பிட்ட நாட்கள் வரை ஆகும் என்று மீனவர்கள் கூறியுள்ளனர். இந்த குறிப்பிட்ட நாட்களில் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் இதற்கு அரசு தரப்பில் உதவ முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.