குடும்ப அட்டை வாங்கீட்டீங்களா.. 2 லட்சம் குடும்பங்களுக்கு குஷியான தகவல்.. உறுதி செய்த ஆபிசர்ஸ்
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதால் 2 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி உடையவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் 2022ம் ஆண்டு இறுதிவரை ரேஷன் கார்டு எளிதாக கிடைத்து வந்தது. ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை குறித்த அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து 2023 மார்ச் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சட்டசபையில் அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் தகுதி உடைய பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

அதாவது 2023 செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்தார். மகளிர் உரிமை தொகை பெற ரேஷன் கார்டு வேண்டும் என்றும் குடும்ப தலைவிகளுக்கே வழங்கப்படும் என்றும், அவர்களது வங்கி கணக்கில் மாதம் மாதம் வரவு வைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால், மகளிர் உரிமைத்தொகையை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் புதிய ரேஷன் அட்டைகளை பெறுவதற்கு விண்ணப்பிக்க தொடங்கினர்.
இதனால் அதுவரை கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த மாமியார், மருமகள் இருவரும் மகளிர் தொகை பெற வேண்டும் என தனித்தனியாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்கள் இதனால், கடந்த 2023-ம் ஆண்டு திடீரென ரேஷன் கார்டு விண்ணப்பம் மிக கடுமையாக உயர்ந்தது. இதை கண்ட அரசு கடந்த 2023 ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதாவது 2023 தொடக்கத்தில் விண்ணப்பித்தவர்களுக்குமே ரேஷன் கார்டு கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இது ஒருபுறம் எனில் இந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் அறிவிப்புகள் வெளியாவதற்கு முன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் மழை வெள்ள நிவாரண உதவித்தொகையை பெறுவதற்கு வசதியாக புதிய ரேஷன் கார்டுகளை அரசு வழங்கியது. அப்போது, இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி உடைய 45 ஆயிரத்து 509 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளை அரசு வழங்கியது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 16ம் தேதி அமலுக்கு வந்ததால் மீண்டும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதன் காரணமாக புதிய ரேஷன் கார்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வழங்கப்படவில்லை. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தாசில்தார்கள் தேர்தல் வேலைகளில் இருந்த காரணத்தால் ரேஷன் கார்டு பணிகள் நடைபெறவில்லை.. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததால், நேற்று முதல் வழக்கமான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரேஷன் கார்டு வழங்கும் பணி விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள்..
தற்போது வரை புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் புதிதாக ரேஷன் அட்டை கேட்டு காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்குவதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருவதாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினார்கள். இதனால், விரைவில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ள. புதிய ரேஷன் கார்டு வாங்கும் சுமார் 2 லட்சம் பேர் அப்படியே மகளிர் உரிமை தொகைக்கும் விண்ணப்பிக்க முடியும். தகுதி உடையவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications