நீட் மறு தேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தொடர்ந்த அப்பீல் வழக்கு.. சென்னை ஹைகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறிய சென்னை உயர் நீதிமன்றம் 16 மாணவர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மே 4 ஆம் தேதி நடத்தப்பட்டது. நீட் தேர்வு நடந்த நாளில் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே.கே.நகர் பத்ம ஷேசாச்திரி 1 மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை தரப்பில் வைத்த வாதத்தில், " வழக்கு தொடர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர் 100 கேள்விகளுக்கு மேல் விடை அளித்து இருந்தனர்.
மின் தடையால் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில்தான், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்கப்படும் வரை மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது. மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications