அரசு பஸ்கள் முதல் ஓட்டல் வரை ரூ.2000 நிறுத்தம்.. 2000 நோட்டு உங்க கிட்ட இருக்கா? கால அவகாசம் உண்டா?
சென்னை: நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நாளை முதல் அதாவது 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு அமைப்புகள் 2000 ரூபாய் பெறுவதை நிறுத்திவிட்டன.. இந்த 2000 ரூபாயை வங்கிகளில் எப்படி மாற்றுவது தெரியுமா?
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும், அதற்குள் அருகிலுள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

காலக்கெடு: நாளை 30ம் தேதியுடன் காலக்கெடு முடிகிறது.. இதில், நேற்று மிலாடி நபி விடுமுறை, இன்று மற்றும் நாளை விடுமுறை இல்லை என்றாலும் (காலாண்டு விடுமுறை பள்ளிகளுக்கு), கடைசி நேரத்தில் மாற்றுவது கடினம் என்ற நிலை உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசு துறை நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டன.
அரசு விரைவு போக்குவரத்து கழகம், ஆம்னி பஸ்கள், தமிழக பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம், சென்னை ஹோட்டல்கள் சங்கம் உள்ளிட்ட பலரும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படமாட்டாது என அறிவித்துவிட்டார்கள்.
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்படுமா? என்று சில நாட்களுக்கு முன்பு, மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்தபோது, இப்போதைய சூழலில்,2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவுமே அரிசிடம் இல்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
எப்படி மாற்றுவது: ஒரு வேளை உங்கள் கையில் இன்னமும் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் எப்படி மாற்றுவது தெரியுமா? செப்டம்பர் 30க்குள் மாற்றிக்கொள்ள, இதற்கு எந்த ஆவணங்களம் தேவையில்லை.. அதற்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், பான் விவரங்களை செலுத்தி ரூபாய் 50,000 வரை மாற்றிக்கொள்ள முடியும்.
கேஒய்சி-யை சரியாக செய்திருந்தால், எந்த கட்டுப்பாடுகளுமின்றி பணத்தை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம். உங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் அல்லாமல் ஆர்.பி.ஐ என் ரீஜனல் அலுவலகங்களிலும் நாளை அதாவது செப்டம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக் கொள்ள முடியும். அதன் பிறகும் உங்கள் கையில் 2000 ரூபாய் நோட்டு இருந்தால், அதாவது அக்டோபர் 1ம் தேதி உங்கள் கையில் 2000 நோட்டு இருந்தால், அந்த பணம் செல்லாது.
வங்கி கிளைகள்: எனவே, உங்களுக்கு அருகில் இருக்கும் வங்கிக் கிளையை அணுகி, பரிமாற்றத்துக்கான படிவத்தைப் பெற்று தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். பிறகு 2000 ரூபாய் நோட்டுகளோடு படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலும். வங்கிக்கு வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தச்செயல்முறை மாறுபடலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மே 19-ம் தேதியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 93% நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்திருப்பதாகவும் ஆர்.பி.ஐ தரவுகள் சொல்கின்றன. ஆகஸ்ட் 31 நிலவரப்படி ரூ.0.24 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாகவும், புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது..
அறிவிப்பு: ஆனால், இன்னும் 25000 கோடி ரூபாய் எஞ்சியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இன்று, நாளை என இந்த 2 நாட்களுக்குள் முழுமையாக மாற்றப்பட்டுவிடுமா? அல்லது கடைசி நேரத்தில் காலஅவகாசம் நீட்டிக்கப்படுமா என தெரியவில்லை. இதுகுறித்த எந்தவகையான அறிவிப்பாக இருந்தாலும், இன்று வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications