"2024 தேர்தலில் திமுக- பாஜக இடையே தான் போட்டி.." அடுத்து அண்ணாமலை சொன்ன மேட்டர்.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: அடுத்து வரும் லோக்சபா தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 2024 தேர்தல் திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என அவர் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
அதிமுக பாஜக இடையே இருந்த கூட்டணி சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அண்ணாவை விமர்சிக்கும் வகையில் அண்ணாமலை பேசிய நிலையில், அதைத் தொடர்ந்து அதிமுக தலைவர்கள் இதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றினர்.
மேலும், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முதலில் மவுனமாக இருந்த எடப்பாடி பழனிசாமியும், இது தொண்டர்களின் முடிவு என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

அண்ணாமலை: இதற்கிடையே தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார். அங்கே அவர் கூட்டணி முறிவு குறித்து மூத்த தலைவர்களிடம் விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணி 1998இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டணியில் பலர் இருந்துள்ளனர். சில கட்சிகள் பிரிந்து சென்றுள்ளன. சில கட்சிகள் பிரிந்து சென்று மீண்டு வந்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கட்சி 2024இல் போட்டியிடும். இதில் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும். மற்றபடி கூட்டணியில் என்ன ஆலோசித்தோம் என்பது குறித்துச் சொல்ல முடியாது. பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். நான் கூட்டணியில் ஒருவர் இருக்கிறார் என சந்தோசப்பட்டதும் கிடையாது. கூட்டணியில் இருந்து ஒருவர் போய்விட்டார் என வருத்தப்பட்டதும் கிடையாது. பாஜகவை தமிழ்நாட்டில் வலிமையாக்க வேண்டும் என்பது மட்டுமே முதல் நாளில் இருந்து எனது நோக்கமாகும்.
புகார்கள்: என் மீது அதிமுக என்று இல்லை. பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தே வருகின்றனர். அதற்கு எல்லாம் என்னால் பதில் தர முடியாது. எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதில் நான் சென்று கொண்டிருக்கிறேன். எந்த பாதையில் பாஜக செல்ல வேண்டும் என்பதிலும் நான் தெளிவாக இருக்கிறேன். மற்றபடி கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.
திமுக vs பாஜக போட்டி: அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி. திமுக இங்கே ஆளும் கட்சியாக இருக்கிறது. பாஜக டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கிறது. போட்டி இந்த இரு கட்சிகளுக்கும் தான். இதை நான் இன்று மட்டும் சொல்லவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இதைத்தான் நான் சொல்லி வருகிறேன். திமுக பாஜக இடையே தான் சவால்.
2024 தேர்தலில் நாங்கள் எங்கள் 10 ஆண்டுக்கால ஆட்சியில் செய்ததைச் சொல்லி வாக்கு கேட்போம். திமுக இங்கே ஆட்சிக்கு வந்து அப்போது 35 மாதங்கள் ஆகி இருக்கும். அவர்கள் அதைச் சொல்லி வாக்கு கேட்பார்கள். அதில் யார் வெல்வார் என்பது 2024இல் தெரிந்துவிடும். எனவே, ஆட்சியில் இல்லாத கட்சிகள் குறித்துப் பேசுவதில் பயனில்லை.
நோக்கம்: என்டிஏ கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும். பாஜக வலிமையாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.. 2024 தேர்தல் பிரதமர் மோடிக்கான தேர்தல். அதை நோக்கிய பயணிப்போம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம்.
இதன் மூலமாகவே நாங்கள் மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வர முடிந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 லோக்சபா தேர்தல் என்பது திமுக பாஜக இடையேயான மோதல் தான். கூட்டணி குறித்த முடிவுகளை அல்லது கருத்துகளை என்னால் எதுவும் சொல்ல முடியாது. அதை பாஜக தேசிய தலைவர் நட்டா தான் கூறுவார்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications