2024 நாடாளுமன்றத் தேர்தல்! திமுகவிடம் மயிலாடுதுறை தொகுதியை எதிர்பார்க்கும் மனிதநேய மக்கள் கட்சி!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 1 சீட்டாவது வாங்கிவிட வேண்டும் என தீவிரமாக முயற்சித்து வரும் மனிதநேய மக்கள் கட்சி, மயிலாடுதுறை தொகுதியை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் ஓரளவு வலிமையான கட்டமைப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகளை காட்டிலும் மமகவும், தமுமுகவும் ஓரளவு ஆக்டிவாக இயங்கி வருவது அந்தக் கட்சியின் ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இதேபோல் நகர, ஒன்றிய வாரியாகவும் அமைப்புகள் இக்கட்சிக்கு உள்ளன.

இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் தமுமுகவில் உள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியையாவது வாங்கிவிட வேண்டும் என முயற்சிக்கும் ஜவாஹிருல்லா அதற்கான காய் நகர்த்தலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் என ஐந்தாறு தொகுதிகளை பரிசீலித்ததில் மயிலாடுதுறை ஓரளவு சாதமகாக இருக்கும் என மமக தரப்பில் பரிசீலிக்கப்பட்டதாம்.
இன்னும் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்காத நிலையில், விரைவில் தொகுதியை தேர்வு செய்து திமுக தலைமையிடம் இது குறித்து வாஹிருல்லா தரப்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 நாடளுமன்றத் தேர்தலின் போதே திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 1 சீட் கேட்டது. ஆனால் அப்போது கடை நேரத்தில் அணுகியதால் மமகவின் முயற்சி பலனளிக்கவில்லை.
அதனால் தான் இந்த தேர்தலின் போது இப்போதே பணிகளை தொடங்கிவிட்டார் ஜவாஹிருல்லா. இதனிடையே மயிலாடுதுறை தொகுதி மீது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு கண் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மயிலாடுதுறை தொகுதியை பொறுத்தவரை திமுகவின் வாக்கு வங்கி பலமாக உள்ள ஒரு தொகுதியாகும். அதுமட்டுமல்ல சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக உள்ளன. இதனால் தேர்தலில் வெற்றி எளிதாகும் என்ற அரசியல் கணக்கும் உள்ளது.












Click it and Unblock the Notifications