குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. தமிழர் சிபி ராதாகிருஷ்ணனை களமிறக்கி கலக்கிய பாஜக! திமுகவிற்கு செக்!
சென்னை: குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பாஜக கூட்டணி அதிரடியாக களமிறங்கி உள்ளது. என்டிஏ கூட்டணி சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டு உள்ளார். பாஜகவின் இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசித் தேதியாகும். தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களுக்காக ஜூலை 21 அன்று பதவி விலகியதால் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவு, பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான நாடாளுமன்ற குழுவால் எடுக்கப்பட்டது.
சி.பி. ராதாகிருஷ்ணன் - பாஜகவின் தமிழ் மீதான மரியாதை
சி.பி. ராதாகிருஷ்ணனை இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அரசு நியமித்துள்ளது. இது தமிழ் கலாச்சாரம் மற்றும் உழைப்புக்கு பாஜக அளிக்கும் மரியாதையாக பார்க்கப்படுகிறது. காசி தமிழ் சங்கமத்தில் தமிழை முதன்மை மொழியாக்கியது முதல், தமிழ் மொழியை உலகளவில் அங்கீகரிப்பது வரை, பாஜக மற்றும் பிரதமர் மோடி அரசு தொடர்ந்து தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் போற்றி வருகிறது. பிரதமர் மோடியும் பல மேடைகளில் தமிழை உலகின் பழமையான மொழி என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வருகிறார்.
திறமைக்கும் அர்ப்பணிப்புக்கும் மரியாதை அளிப்பது பாஜகவின் பண்பு. தமிழ் மண்ணின் பெருமைக்குரிய டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை இந்திய குடியரசுத் தலைவராக பாஜகவே நியமித்தது. ஆனால், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அவருக்கு இரண்டாவது முறை வாய்ப்பளிக்காமல் நிராகரித்தது.
சி.பி. ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவரான சி.பி. ராதாகிருஷ்ணன், துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது, உழைக்கும் மற்றும் கொள்கைப்பிடிப்புள்ள தனிநபர்களை அங்கீகரிப்பதில் பாஜக கொண்டுள்ள அர்ப்பணிப்பை காட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள், பிரதமர் மோடியையும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவையும் வேட்பாளரைத் தேர்வு செய்ய அதிகாரம் அளித்திருந்தனர். இந்தத் தீர்மானத்தை ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜீவ் ரஞ்சன் சிங் முன்மொழிய, தெலுங்கு தேசக் கட்சியின் ராம் மோகன் நாயுடு வழிமொழிந்திருந்தார். அதன்பின் சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வாகி உள்ளார்.
திமுகவிற்கு செக்
சி பி ராதாகிருஷ்ணன் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து மேலே வந்த அரசியல் தலைவர். சி.பி. ராதாகிருஷ்ணன் 2023 முதல் 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார். தெலங்கானா மாநிலத்தின் கூடுதல் பொறுப்பையும் வகித்துள்ளார். மேலும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவர் கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து இருமுறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அத்துடன், பாஜகவின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தி.மு.க "தமிழ், தமிழர்" என்ற அடையாளத்தை பயன்படுத்த தவறியது இல்லை. பல அரசியல் நிகழ்வுகளை தமிழர், தமிழ் என்று மாற்றி அதில் திமுக அரசியல் செய்தது உண்டு. ஆனால், சி.பி. ராதாகிருஷ்ணன் போன்ற பெருமைமிக்க தமிழருக்கு ஆதரவளிக்க மறுத்து, சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவாக திமுக களமிறங்கி உள்ளது. இது தி.மு.க-வின் பாசாங்குத்தனத்தை, இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
தேசிய அளவில் தமிழ் அடையாளத்தை பாஜக மதிக்கிறது. ஆனால், தி.மு.க-வின் அரசியல், தமிழ்ப் பெருமையை வெற்று கோஷங்களாக மட்டும் குறைக்கிறது என்பதை குறிக்கும் விதமாக இந்த தேர்தல் நிலவரம் மாறி உள்ளது. இது இரு கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாகக் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications