ஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி.. 22 வயது பெண்ணின் திடீர் மரணம்.. என்ன காரணம்?
தொண்டையில் ஆபரேஷன் செய்த பெண் திடீர் மரணமடைந்தார்
சென்னை: ஆபரேஷன் முடிந்த அடுத்த அரை மணி நேரத்திலேயே ரத்த ரத்தமாக வாந்தி எடுத்தார் சங்கீதா.. தொண்டை வலி என்று ஆஸ்பத்திரிக்கு போன 22 வயது சங்கீதாவின் திடீர் மரணம் செங்கல்பட்டு, சென்னை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சாமியார் கேட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்...இவருடைய மகள் சங்கீதா.. 22 வயதாகிறது.
சில காலமாகவே இவருக்கு தொண்டை வலி இருந்துள்ளது.. ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் கடந்த மாதம் தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்... அவரை பரிசோதித்த டாக்டர், தொண்டையில் சதை வளர்ந்திருப்பதாகவும் ஆபரேஷன் செய்துதான் அதை அகற்ற வேண்டும் என்றும் சொன்னார்கள்.
இதையடுத்து கடந்த மாதம் 20-ந்தேதி சங்கீதாவுக்கு தொண்டையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.. ஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் சங்கீதா ரத்த வாந்தி எடுத்தார்.. மறுநாளே சுயநினைவும் போய்விட்டது.. உடனே டாக்டர்கள், ஆபரேஷனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. இதை சரி செய்கிறோம் என்று சொல்லி உள்ளதாக தெரிகிறது. ஆனால் நேற்று முன்தினம் சங்கீதாவை வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி ஆஸ்பத்திரி தரப்பில் சொல்லி விட்டார்களாம்.
அதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன், இதுகுறித்து தாம்பரம் போலீசில் புகார் தரவும் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே சங்கீதாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்துவிட்டார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதார்.. தவறான ஆபரேஷன் தனியார் ஆஸ்பத்திரி, சம்பந்தப்பட்ட டாக்டர் மீது புகார் எடுக்க வேண்டும் என்று திரும்பவும் தாம்பரம் போலீசில் புகார் தந்தார்.
இந்த புகாரின் பேரில் மீண்டும் விசாரணை நடந்து வருகிறது. இப்போதைக்கு சங்கீதா உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு சென்றுள்ளதால், அந்த ரிப்போர்ட் வந்தால்தான் அவரது இறப்புக்கான காரணம் உறுதியாக தெரியும் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்!