ஐஐடி, என்.ஐ.டியில் கொடியேற்றிய 225 அரசுப் பள்ளி மாணவர்கள்... ஸ்டாலின் வேற லெவல்!
சென்னை: அரசுப் பள்ளிதானே என ஏளனமாகப் பார்த்தது அந்தக் காலம். அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிப்பது இந்தக் காலம்.
இந்த ஆண்டு மட்டும் ஐஐடி, என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 225 பேர். அத்தனை பேர் முகத்திலும் வறுமைக் கோடுகள் பளிச்சென்று தென்படுகின்றன.

ஆனால், இனி அவர்களின் வாழ்க்கையை இந்தக் கல்வி வளமாக்கிவிடும். அதை உணர்ந்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிக்க முடியும் என்ற பெருமையைப் படைத்திருக்கிறீர்கள்.
இதன் மூலம் அரசுப் பள்ளியின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது என்ற உண்மை உலகத்திற்குத் தெரியவந்துள்ளது. இப்போது உயர்கல்வி படிக்கப் போகின்ற இந்த மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
படிப்பை முடித்து நீங்கள் வெளியே வரும்போது உங்கள் உலகம் ரொம்ப பெரியதாக இருக்கும். ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயம் மலர வேண்டும் என்றால், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்ற மாதிரி இருக்க வேண்டும்.

இந்த உயர்கல்வி மூலமாக உங்கள் எல்லோருக்கும் அது சாத்தியப்பட்டுள்ளது. வேறு கவலைகள் வேண்டாம். நான் இருக்கிறேன். படியுங்கள்.. படியுங்கள்.. படியுங்கள்" என தனது தன்னம்பிக்கை வார்த்தைகளால் மாணவர்களுக்கு தைரியம் கொடுத்துள்ளார்.
தங்களின் விடா முயற்சியால் வென்று காட்டி உள்ள அந்த மாணவர்களின் முகங்களை அரசே இப்போது வெளிச்சம் போட்டுக்காட்டி உள்ளது.
இவர்கள் யார்? எந்த மாதிரியான குடும்ப பின்புலத்திலிருந்து வந்திருக்கிறார்கள்? வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது இந்தக் கட்டுரை.

வரவேற்கும் வாரங்கல் என்ஐடி: "அரசு மாதிரி பள்ளியில்தான் நான் படித்தேன். நான் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் என்னை மிகவும் அக்கரையுடன் பார்த்துக்கொண்டார்கள். படிப்பின் மீது அதிக கவனம் வைக்க அவர்கள்தான் வழிகாட்டினார்கள். அவர்கள் நடத்தும் பாடங்களில் எந்த சந்தேகம் வந்தாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் தன்மையாகப் புரியும்படி விளக்கிச் சொல்வார்கள்.
எங்கள் கிராமத்திலேயே முதன்முறையாக என்.ஐ.டி.யில் சேர்ந்து படிக்கப் போகும் முதல் பெண் நான்தான். அது என் ஊருக்கும் பெருமை. எனக்கும் பெருமை" என்கிறார் ஸ்ரீதேவி. வாரங்கலில் உள்ள என்ஐடி-யில் சேர்ந்து படிக்கப் போகிறார்.

இவரது ஊருக்குச் சரியான சாலை வசதிகள்கூட இல்லை. மலைப்பகுதியான கிராமம். இருசக்கர வாகனங்களில்தான் சில மைல் தூரம் பயணம் செய்ய வேண்டும். அதற்கு அவரது தந்தை உறுதுணையாக இருந்திருக்கிறார்.
'நாங்கள்தான் படிக்கவில்லை. என் பிள்ளையாவது நன்றாகப் படிக்கட்டும். அதற்காகத்தான் நாங்கள் இரவு பகல் பார்க்காமல் இந்த வயற்காட்டில் உழைக்கிறோம்' என்கிறார் அவர்.

வரவேற்கும் திருச்சி என்.ஐ.டி: இவரைப் போலவே அரசுப் பள்ளியில் படித்த இன்னொரு மாணவி சத்தியப் பிரியா. இவர் இந்த ஆண்டு திருச்சி என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்பதற்காகத் தேர்வாகி உள்ளார்.
"என் அப்பா ஒரு கூலித் தொழிலாளிதான். மிகக் கடுமையாக உழைத்து என்னை இந்தளவுக்குப் படிக்க வைத்திருக்கிறார். நான் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போய் சம்பாதிக்கவேண்டும் என்பது அவரது லட்சியம். அவர் ஆசைப்பட்டதைப் போலவே இந்த ஆண்டு என்.ஐ.டி. திருச்சியில் படிக்கத் தேர்வாகி இருக்கிறேன்" என்கிறார் சத்தியப் ப்ரியா.

"நான் ஏழாம் வகுப்புவரைக்கும் தான் படித்திருக்கிறேன். எனக்கு பில்டிங் இன்ஜினியர் ஆகவேண்டும் என்று ஆசை. ஆனால் அது நடக்கவில்லை. இருந்தாலும் சூப்பர்வைசர் வேலை எல்லாம் பார்த்தேன்.
என் கனவு நிறைவேறவில்லை. என் மகள் அரசுப் பள்ளியில்தான் படித்தால். அவள் இப்போது என்.ஐ.டி.க்கு தேர்வாகி இருக்கிறாள். என் கனவை என் மகள் நிறைவேற்றிக் கட்டுவாள் என நம்பிக்கையாக இருக்கிறேன்" என்கிறார்

அரசுப் பள்ளி தந்த சட்டமேதை: தொடங்கும்போதே, 'I want to become a lawyer' என்று ஆங்கில சொற்களால் நெத்திப் பொட்டி தைத்தாற்போல் பேச்சை ஆரம்பிக்கிறார் கீர்த்திகா. இந்த ஆண்டு முதல் திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படிப்புக்காகத் தேர்வாகி உள்ளார். இவரும் அக்மார்க் அரசுப் பள்ளி மாணவிதான். இவர் ஒரு மாற்றுத்திறனாளி.
"நான் ஏன் சட்டம் படிக்க முடிவெடுத்தேன் என்றால், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் இங்கே மறுக்கப்படுகின்றன. என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக சட்டரீதியாகப் போராடுவதற்காகத்தான், நான் சட்டப்படிப்பைத் தேர்வு செய்தேன்" என்கிறார்

இவரது குடும்பம் ஒரு நெசவாளர் குடும்பம். அம்மா, அப்பா இருவரும் தறி நெய்துதான் இவர்களைப் படிக்கவைத்திருக்கிறார்கள். கீர்த்திகா வீட்டில் மூத்த மகள்.
"நம்மைப் பார்த்து யார் இழிவாக நினைக்கிறார்களோ, அவர்கள் பெருமைப்படும் அளவுக்கு நாம் முன்னேறிக்காட்ட வேண்டும் என்று என் மகள் அடிக்கடி சொல்வாள். அதைப்போலவே இன்று அரசுப் பள்ளியில் படித்து சட்டம் படிப்பதற்காகத் தேர்வாகி இருக்கிறாள். அவள் சொன்ன சொல்லைக் காப்பாற்றிவிட்டாள்" என்கிறார் கீர்த்திகா தாய்.

"விடா முயற்சியுடன் படித்தால், அரசுப்பள்ளி மாணவர்களும் சாதிக்கலாம். அந்தத் திறமை அவர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது" என்கிறார் கீர்த்திகா.
"நான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில்தான் நான் படித்தேன். படிக்கும்போதே விளையாட்டிலும் நிறையப் போட்டிகளில் கலந்துகொண்டேன்.

வரவேற்கும் சென்னை ஐ.ஐ.டி.: அரசுப் பள்ளி என்பது என்னைப் பொருத்தவரை பெருமையின் அடையாளம். அந்தப் பெருமையின் அடையாளத்தை நானும் ஒருவனாக இருக்கிறேன்" எனச் சொல்லும் வசந்த குமார் இந்த ஆண்டு முதல் சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்கப் போகும் அரசுப் பள்ளி மாணவர். இவர் சேலம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர்.
இவரது தாய் வீட்டில் பசுமாடுகளை வைத்து பால் கரந்து வருகிறார். இவரது தந்தை நூற்பாலையில் வேலைப் பார்த்துவருகிறார். "என் மகன் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறான் என்பது எங்களுக்கும் ஊருக்கும் பெருமை" என்கிறார் அவர்.

"எங்கள் கிராமத்திலிருந்து முதன்முறையாக நான் தான் என்.ஐ.டிக்குப் படிக்கப் போகிறேன்" என்கிறார் பரணிதரன். இவர் இந்த ஆண்டு முதல் திருச்சி என்.ஐ.டி.யில் படிக்கத் தேர்வாகி உள்ளார். "என்னைப் போன்ற ஏழைப் பிள்ளைகள் உயர்கல்வி படிக்கத் தேவையான உதவிகளை நான் வருங்காலத்தில் செய்வேன்" என்கிறார் பரணி.
சக்திவேல் என்ற மாணவரும் திருச்சி இந்த ஆண்டு முதல் திருச்சி என்.ஐ.டி.யில் படிக்கத் தேர்வாகி உள்ளார். கேமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். இவர் தருமபுரி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர். இவர் பள்ளிக்காலங்களில் படிப்புடன் சேர்த்து விளையாட்டிலும் ஆர்வத்துடன் இருந்துள்ளார். அதனால், படிப்பின் சுமை அறியாமல், மன அழுத்தம் இல்லாமல் எளிமையாகப் படித்து முடித்தேன் என்கிறார்.

ராகேஷின் தாய் ஆடு மாடுகளை வளர்த்துக்கொண்டு கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் இந்த ஆண்டு முதல் வாரங்கலில் உள்ள என்.ஐ.டியில் சேர்ந்து படிக்கத் தேர்வாகியுள்ளார். இவரைப் போலவே கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் தேர்வாகி இருக்கிறார் கதிரவன்.
"எங்கள் குடும்பத்தில் யாரும் அதிகம் படித்ததில்லை. மருத்துவப் படிப்பு என்பது என் தலைமுறைக்கே எட்டாக்கனியாக இருந்தது. ஆனால், என் மகன் அரசு மாதிரி பள்ளியில் படித்ததால், இந்த ஆண்டு மருத்துவம் படிக்கத் தேர்வாகி இருக்கிறான்" என்கிறார் கதிரவன் தந்தை.

வெல்டர் மகன் டாக்டர்: இவர் லெல்டிங் பட்டறையில் பணியாற்றி வருகிறார். கதிரவன் படிக்கும் போதே குடும்ப வறுமைக் காரணமாக மருந்தகம் ஒன்றில் பகுதிநேரமாக வேலைப் பார்த்துக்கொண்டே படித்து வந்திருக்கிறார்.
சந்திரகலா, இந்த ஆண்டு முதல் சென்னையிலுள்ள என்.ஐ.ஃப்.டியில் சேர்ந்து படிக்கப் போகிறார். இவர் பள்ளிப் படிப்பின்போதே ஃபேஷன் டெக்னாலஜி வகுப்புகளில் பங்கேற்று அதற்கான அறிவைப் பெருக்கிக் கொண்டுள்ளார்.

இப்படி இந்த ஆண்டு 6 மானவர்கள் ஐ.ஐ.டிக்கு தேர்வாகி உள்ளனர். 51 மாணவர்கள் என்.ஐ.டி மற்றும் ஐஐஐடியில் சேர்ந்து உயர்படிப்பு படிக்கத் தேர்வாகி உள்ளனர். 56 மாணவர்கள் என்.ஏ.டி.ஏ உயர்படிப்புக்குத் தேர்வாகி உள்ளனர்.
மேலும் ஐ.எம்.யு - சிஇடிக்கு 18 மாணவர்களும் இண்டர்நேஷனல் ஸ்டெடிஸ்க்கு 2 மாணவர்களும் என்.ஐ.எஃப்.டிக்கு 28 மாணவர்களும் சியுஇடிக்கு 25 மாணவர்களும் என ஆக மொத்தம் அரசுப் பள்ளி மாணவர்கள் 225 பேர் உலகத்தரமான உயர்படிப்பில் சேர்ந்து உச்சம் தொட்டு இருக்கிறார்கள்.













Click it and Unblock the Notifications