ஒழுங்கா இரு.. இல்லனா ஜெயில்ல இரு.. ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டாஸ்! அலற விடும் சென்னை கமிஷனர்!
சென்னை: சென்னை மாநகர கமிஷனர் அருண், தலைநகரில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்க அதிரடி காட்டி வருகிறார். கடந்த ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒரு மாத காலமாக சென்னையில் எந்த கொலை சம்பவமும் நடக்கவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் தொடர் கொலைகள் நடந்து வருவதாக தமிழக அரசு மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்ய்யப்பட்டனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக புதிதாகப் பொறுப்பேற்ற அருண், சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார்.

சென்னை முழுவதும், குற்றப் பின்னணி கொண்ட 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க காவல் ஆய்வாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார் ஆணையர் அருண். அதன்படி, போலீசார் குற்றப் பிண்ணனி உடைய ரவுடிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் எச்சரித்தனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து பிரபல ரவுடிகள், முக்கியமான அரசியல் பிரமுகர்கள் சிக்கி வருகின்றனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அருண், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது, நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வது ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறி இருந்தார். மேலும், ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பதில் அளிக்கப்படும் என்றும் அதிரடியாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சென்னையில் ஒரு கொலை சம்பவம் கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை மாநகரில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 11.08.2024 வரை சென்னை பெருநகரில் கொலை. கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 453 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 133 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 183 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 29 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 7 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 17 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் படுத்திய 5 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 4 குற்றவாளிகள் என மொத்தம் 836 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நேற்று (ஆகஸ்ட் 11) வரையிலான 7 நாட்களில் மட்டும் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் நரசிம்மன், குணசேகரன், சதிஷ்ராஜ், ஜோசப், சரவணன் ஆகிய 5 நபர்களை கடந்த 05.08.2024 அன்றும், மணிகண்டன், ரஞ்சித்குமார், சங்கர், அகிலன் (எ) வெள்ளையங்கிரி, மணிகண்டன் (எ) மணி ஆகிய 5 நபர்களை கடந்த 06.08.2024 அன்றும், ராம்கி (எ) ராம்குமார், மோகன்ராஜ் (எ) பால் மோகன், விஜய், பாஸ்கர், சுதாகர், மணிகண்டன் (எ) அப்பு (எ) ஆன்ட்ரூஸ், அப்புராஜ், சந்திரசேகர், சதிஷ், ஜெ.சூர்யா, என்.சூர்யா, குமரன், பப்லு (எ) சண்முகம் ஆகிய 13 நபர்களை 09.08.2024 அன்றும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 23 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்பதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications